Srirangapankajam

June 13, 2009

Pesum Arangam – 79

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 7:16 am

Chapter-79
10.06.2009

பேசும் அரங்கத்தின் இந்த பாதுகா பிரபாவத்தினை நிறைவு செய்பவர்
திரு. Madhusudhanan Kalaichelvan

ஆழ்வார், அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையே வடிவானவர் என்பதைப் பார்த்தோம். இனி ஆழ்வாரைப்போலே, எம்பெருமானுக்கு நெருக்கமாக இருந்தவர்களோடு ஆழ்வாரை ஒப்பிட்டு நோக்கும் நாயனாரின் கருத்துக்களை அநுபவிப்போம்.

இளைய பெருமாள் :

இளைமைக்காலம் தொடங்கி இளையபெருமாள், எம்பெருமானுக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் இடைவிடாது எல்லாக் காலங்களிலும் செய்ய வேண்டும் என்று பாரித்து, சீதாபிராட்டியின் புருஷகாரமடியாக அக்கைங்கர்யத்தையும் பெற்று ஸ்ரீராமனே தனக்கு செல்வம் என்றிருந்தார்.

ஆழ்வாரும் இவரைப்போலே “அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து” என்று சிறு பிராயம் துவங்கி, “அலர்மகளை முன்னிட்டு அவன் தன் மலரடியை” மன்னி, “ஒழிவிலாக் காலமெல்லாம்” எம்பெருமானுக்கு எல்லாவித கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்று பாரித்தார்.

மேலும், தனக்கு எல்லா உறவும் ஸ்ரீராமனே என்றிருந்த இளைய பெருமாளைப்போலே இவரும் “சேலாய் கண்ணியரும், அருஞ்செல்வமும், நன் மக்களும் மேலாய் தாய் தந்தையரும் அவரே” என்று எம்பெருமானே தனக்கு எல்லாம் என்றிருந்தார்.

ஸ்ரீ பரதாழ்வான் :

பரதாழ்வான், தன் தாயான கைகேயி, பெருமாளை வனத்திற்கு அனுப்பினாள் என்ற காரணத்தால், அவளை வெறுத்து, வந்த அரசையும் செல்வத்தையும் துச்சமாக நினைத்து பெருமாளைத் தேடிச் சென்று, அவர்தம் “பாதுகையை” பெற்றுவந்து, அவர் வருமளவும் கண்ணீர் வடித்து காத்திருந்தார்.

அதே நிலையில் ஆழ்வாரும் அரங்கனைப் பிரிந்து வாடும் அவர் பதற்றத்திற்கு இசையாது இருந்த தன் தாயாரை வெறுத்து, “பெருஞ் செல்வம் நெருப்பு” என்று ஒதுங்கி, எம்பெருமானை வேண்டிச் சென்று, “திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிகள் கூட்டினை” என்று அவன் திருவடிகளை தலை மேல் தாங்கினார். அதோடு எம்பெருமான் தன்னருகே இவரைச் சேர்த்துக் கொள்ளும் அளவும் கண்ணீர் பொங்க அழுது கிடந்தார்.

ஸ்ரீ சத்ருக்நாழ்வான்

சத்ருக்நாழ்வான் மற்ற இருவரைப்போல், இராமனின் வடிவழகிலும் ஈடுபடாது, பரதனுக்கு தொண்டு செய்து, பரதனுக்கு உகப்பு என்பதற்காக, இராமனின் வடிவழகையும் மனதில் கொண்டார்.
அதே நிலையில் ஆழ்வாரும், ததீயர்களுக்கு அடிமை பட்டிருப்பதை விரும்பி, அவர்களின் உகப்புக்காக, எம்பெருமானின் த்வ்ய மங்கள விக்ரஹத்தை தன் மனதிலே கொண்டார். தாமே இதை “புலன் கொள் வடிவு என் மனத்தாய்” என்றும் பாடியுள்ளார்.

தசரத சக்ரவர்த்தி :

ஸ்ரீராமனின் வடிவழகிலே ஈடுபட்ட தசரதன், எப்போதும் தன் கண் நிறைய அந்த வடிவழகை நெஞ்சில் நிறுத்தி அநுபவித்து வந்தது போல, ஆழ்வாரும் “எப்போழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி” என்று அநாதி காலம் வரை அநுபவித்தாலும், “அப்போதைக்கப்பொழுது என் ஆராவமுது” என்கிற படி மேன் மேலும் அநுபவிக்க ஆசை கொண்டிருந்தார்.

பிரஹலாதன் :

தன்னை துன்புறுத்திய நெருப்பு, போன்றவைகளைக் கூட எம்பெருமானுக்கு அனுகூலமான வஸ்துவாக நினைத்து, எம்பெருமானின் அந்தர்யாமித்வத்தை எல்லோருக்கும் உபதேசித்து வந்தார்.
அதே போல் ஆழ்வாரும், “அறிஉம் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்றும் மெய் வேவாள்” என்பது முதலாக, நெருப்பு முதலான வஸ்துக்கள் எம்பெருமானை உயிராகக் கொண்டிருப்பதனால், அனுகூலமாகக் கொண்டதோடு,
“கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் ”
என்று எம்பெருமான் எங்கும் பரந்திருப்பதை பாடியதாலும் ப்ரஹலாதனோடு ஒப்பாகிறார்.

விபீஷ்ணாழ்வான் :

லங்கா ராஜ்யதோடு கூட, மனைவி, மக்கள் என்று எல்லாவற்றையும் விட்டு, இராமனின் திருவடிகளே தஞ்சம் என்று பற்றினான் ஸ்ரீவிபீஷ்ணாழ்வான்.
அதே நிலையில், ஆழ்வாரும் ஸம்ஸாரத்தில் உள்ள எல்லா உறவுகளையும் அறுத்து விட்டு, “தயரதற்கு மகன் தன்னைபற்றி மற்றிலேன் தஞ்சமாகவே” என்று இராமபிரானையே எல்லாமாகப் பற்றினார்.

திருவடி :

திருவடி இராமனின் வைபவத்தை தவிற மற்றெதிலும் நெஞ்சு செல்லாதவராய், ஸ்ரீராமனைத் தன்னுள்ளே உடையவராய் இருந்தார். அதுபோல, ஆழ்வாரும் “ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே ஓவாத ஊணாக உண்” என்று இராம வைபவத்தை போக்கியமாகவும், “திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான்” என்று ஸ்ரீராமன் தன்னுள்ளே உறைவதையும் பாடியுள்ளார்.

அருச்சுனன்:

பாரத போரின் இடையில், எம்பெருமானின் விஸ்வரூப சேவைப் பெற்ற அர்ச்சுனன், மகிழ்ச்சியோடு பயமும் கொண்டு, எப்போதும் போல் நான்கு தோள்களோடே சேவை சாதிப்பாய் என்று ப்ரார்தித்த்தாப் போலே;
ஆழ்வாரும், “ நல்குரவும் செல்வமும் ” என்று பலவகை பொருள்களாலான உலகை உடையவனாய் கொண்ட பெருமாளை, “கூராராழி வெண் சங்கேந்தி வாராய்” என்று அரங்கனின் சங்கு சக்கரம் தாங்கிய திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காண ஆசைப்பட்டார்.

பிராட்டிமார்கள்:

மேற் சொன்னவர்கள் எல்லோரையும் விட, ஆழ்வாரின் மேன்மையை பிராட்டியாரோடு ஒப்பிடுகையில் அறியலாம். “பின்னை கொல், நிலமாமகள் கொல், திருமகள் கொல் பிறந்திட்டாள்” என்ற பாசுரத்தில் ஆழ்வாரை நீளாதேவி, பூமிபிராட்டி, ஸ்ரீரங்கநாச்சியார் என்று தேவிமாரோடும் ஒப்பிட்டு; மேலும் சில பாசுரங்களால் ஆழ்வாரின் பாவம், கோபியஸ்திரிகளோடும், மதுரா நகரஸ்திரீகளோடும், த்வாரகையில் இருந்த பதினாராமாயிரவரோடும் ஒக்கும் என்று சாதிக்கிறார்.

இவர்கள் அனைவரும் தனித் தனியே எம்பெருமானோடு சம்பந்தம் பெற்று, ஒவ்வோர் காரணங்களால் வைபவம் படைத்தவர்கள். ஆனால் இவர்கள் வைபவமெல்லாம் ஒரு சேரப் பெற்றவராகையாலே, இவர்களனைவரையும் விட வைபவம் ஆழ்வாருக்கு உண்டு என்பது அறிய முடிகிறது.
பிராட்டி மார்களைவிடவும் அதிக வைபவம் ஆழ்வாருக்கு என்றால், ஆழ்வாருக்கும் அரங்கனுக்குமான நெருக்கம் நமக்கு நன்கு புலப்பட வேண்டும். இத்துடன் வைபவம் பெற்ற ஸ்ரீநம்மாழ்வாரின் சம்பந்தத்தை, அரங்கனின் ஸ்ரீ பாதுகைகள் மூலம் பெற்று, ஆழ்வார் க்ருபைக்கு பாத்திரமாவோம்.

//இத்துடன் ஸ்ரீபாதுகாப்ரபாவம் முற்றிற்று//

பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
நாயனார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம் !!

June 8, 2009

Pesum Arangam – 78

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 7:59 am

 
Chapter-78
08.06.2009
 
பேசும் அரங்கத்தின் இந்த பாதுகா பிரபாவத்தினை நிறைவு செய்பவர்
திரு. Madhusudhanan Kalaichelvan <madhuraamanujam@gmail.com>
 
அரங்கனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஸ்ரீ நம்மாழ்வார், அந்த அரங்கனின் காரணம் பாராத, க்ருபையாலேயே திருவவதாரம் செய்தார் என்றும், அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையே வடிவானவர் என்றும் நேற்று பார்த்தோம்.

அரங்கனின் அருள் வடிவான ஆழ்வாரின் அருளின் விசேஷத்தை இன்று மதுரகவிகளின் சொற்களைப் கொண்டு சற்றே அநுபவிப்போம்.

இவர் ஆழ்வாரை சேவிக்கும் முன் வரை, பிறர் பொருளையும் உடைமைகளையும் தன்னதாக நினைத்திருந்தாராம். இத்தால், வேதம் அறிந்த வைதீகர்கள் இவரை பாவத்தின் உருவமாகவே பார்த்து ஒதுக்கினாகள். அப்படி அவர்கள் இவரை ஒதுக்கியதே காரணமாகக் கொண்டு ஆழ்வார் இவருக்கு க்ருபைச் செய்தார். அவ்வாறு ஆழ்வார் இவருக்கு செய்த அருளை “கண்ணி நுண்சிருத்தாம்பில்” எட்டாம் பாசுரத்தில் கொண்டாடுகிறார்.
“அருள் கொண்டாடும் அடியவர் இன்புற,
அருளினான் அவ்வருமறையின் பொருள்,
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்,
அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே! ”

ஆழ்வார் நம்மைத் திருத்த வேண்டி த்வயத்தின் அர்த்தத்தை திருவாய்மொழியின் மூலம் பாடினார். நமக்கு செய்ய வேண்டிய உபதேசங்களையெல்லாம் எம்பெருமான் அளித்த மயர்வற மதிநலத்தின் மூலம் செய்தார். அந்த அருளானது, எம்பெருமானின் அருளையே எதிர் பார்த்திருக்கும் அடியார்க்காய் செய்தது.
யார் இவர்கள் ?
வேறு ப்ரயோஜனத்துக்காக எம்பெருமானை அண்டாதவர்கள், தங்கள் கைம்முதலில் ஏதும் செய்ய முடியாது என்று அறிந்தவர்கள், தாங்கள் உய்ய, அரங்கனின் அருளல்லது மற்றில்லை என்று, அவன் அருளுக்காக காத்திருந்து, அதையே கொண்டாடியும் வாழ்பவர்கள். இவர்கள் “அருள் கொண்டாடும் அடியவர்கள்”.
இந்த பெருமை பெற்றவர்களுக்காக மட்டுமே திருவாய்மொழி பிறந்தது. திருவாய்மொழியின் அர்த்தங்களைக் கொண்டு எம்பெருமானின் அருளால் மட்டுமே வாழ்ச்சி என்றிருப்பவர்கள் “அருள் கொண்டாடும் அடியவர்கள்”. அவர்கள் இன்புற வேண்டி ஆழ்வார் ‘எம்பெருமானின் அருளாய்’ திருவாய்மொழியை அருளினார். அவரின் ‘அருள்’ உலகிலே சீறிய பேரருள் என்கிறார் மதுரகவிகள்.
பெரிய கோவிலில் அரையர் ஸ்வாமிகள் அரங்கனுக்கு கொண்டாட்டங்கள் சேவிப்பார். அதில், “ரிக் யஜுஸ் ஸாம அதர்வன நான்மறை சிகரக்கோவில் பெருமாள்!!” என்பதும் ஒன்று. அதன்படி, நான்மறையின் பொருளாய் விளங்குவது அரங்கரே என்பது பூர்வாச்சார்யர்கள் திருவுள்ளம் என்பது தேறுகிறது.
இந்த பாசுரத்தில், “அருமறையின் பொருள், அருள் கொண்டு” என்று பிரித்தால், அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையினாலே ஆயிரம் பாசுரங்களையும் ஆழ்வார் பாடினார் என்பது தேறும்.
ஆக, “அவனை அடைய, அவனே வழி” என்னும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் படி நம்மை அவன் திருவடிக் காட்படுத்திக் கொள்ள, அவனருளே உருவான ஆழ்வாரைக் கொண்டு ஆயிரம் தமிழ் பாட வைத்தான்.
ஆனால், மதுரகவிகள் அரங்கனின் அருளுக்கு ஏங்காது, அவனைக் காட்டிக் கொடுத்த ஆழ்வாரின் திருவருளுக்கு பல்லாண்டு பாடுகிறார். மேலும் ஆழ்வாரின் அருள் உலகில் உள்ள எல்லாவற்றையும் காட்டிலும் மேலானது என்கிறார். இது எவ்வாறு சாத்தியமானது ?
ஆழ்வாரின் , ஆயிரம் இன் தமிழில் –
“திருவடியை அடைவிக்கும் திருவடி சேர்ந்துய்மினோ”
என்று, அரங்கன் திருவடியை அடைய அதையே பற்றுங்கோள் என்று நமக்கு உபதேசம் செய்கிறார்.
அரங்கனின் திருவடி வேறு, ஆழ்வார் வேறல்லவே(இதை ஸ்ரீ வேதந்தவாசிரியருடைய வாக்கினால் பல முறையும் கேட்டோம்). ஆக, ஸம்ஸார தாபத்தை தகிக்க வேண்டி அரங்கனாகிற நிழலிலே (வாசுதேவ தருச்சாயா) ஒதுங்கினார் ஸ்ரீ நம்மாழ்வார். அதே காரணத்திற்காக ஆழ்வார் திருவடிகளில் ஒதுங்கினார் ஸ்ரீ மதுரகவிகள்.
ஆயிரம் இன்தமிழ் பாடும் வரை, ஆழ்வாரை சம்சாரத்தில் காக்க வைத்தார் அரங்கர். பதினொரு பாசுரம் பாடிய அளவிலேயே ஸ்ரீமதுரகவிகளுக்கு ஆழ்வார் அருள் கிடைத்தது. இது தான் ஆழ்வாரின் அருளுக்கும், அரங்கனின் அருளுக்கும் உள்ள வேறுபாடு.
இங்கே ஆழ்வாரை சொல்வது, அவர் தொடக்கமாக, உடையவர் வரையிலும், அவரைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் பர்யந்தமும் வந்த நம் குருபரம்பரையில் இரத்தினங்களாய் மிளிரும் நம் ஆச்சார்யர்கள் அளவும் ஒக்கும். ஆழ்வாரிடமிருந்து துவங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில், நம் ஆச்சார்யர்கள் அளவும் உள்ளவர்கள் எல்லாம், அரங்கனின் திருவடிகளே. ஆழ்வார் மதுரகவிகளுக்கு செய்த அநுக்கரஹம் போல், அரங்கனின் பாதுகைகளாக இருந்து, இவர்கள் நமக்கும் செய்கிறார்கள்.
ஆக, ஆச்சார்யர்களின் அருளால் மட்டுமே அரங்கனின் திருவடியில் நாம் ஒதுங்க முடியும் என்பதை உணர்ந்து, ஆழ்வார் ஆச்சார்யர்களின் க்ருபைக்கு பாத்திரமாக வேண்டியது மட்டுமே, நாம் செய்ய வேண்டியது. இதற்கான உபாயமும் அவர்களே. அவர்கள் திருவடியில் ப்ராவண்யம் ஏற்பட, அவர்கள் ஸம்பந்தத்தால் நம் அஞ்ஞானமாகிற பாபம் அழிக்க பட்டு அரங்கனின் திருவடியில் நித்ய கைங்கர்யம் ப்ராப்த்தமாகிறது.
பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
நாயனார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்
!!
 

Pesum Arangam – 77

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 7:42 am

 
Chapter-77
06.06.2009
 
பேசும் அரங்கத்தின் இந்த பாதுகா பிரபாவத்தினை நிறைவு செய்பவர்
திரு. Madhusudhanan Kalaichelvan <madhuraamanujam@gmail.com>
 
நல்ல ஆச்சார்யர்கள் நமக்கு கிடைப்பது என்பது,  நமக்கு பாக்யம் இருந்தால் மட்டுமே சாத்யமாகும்.   நாம் எண்ணியபடி கிடைக்காது போனால், நமக்கு பாக்யமில்லாது போயின் என்ன செய்யலாம்.? ஆச்சர்யனை விட்டு பல மைல் தூரம் தள்ளி போனாலும், அவர்கள் நம்மை கிருபை கொண்டு அநுக்ரஹிக்க, அவர்கள் போல்வாரை நம்மை காக்க அனுப்பி வைப்பார்கள்.
 
நம்முடைய பூர்வாச்சார்யர்களை  ஒருமனதோடு தியானிப்பதும்,  அவர்களை நம்முடைய ஸவப்னத்தில் தரிசிக்கப் பெறுதலும் நமக்கு பகவத்கிருபையைப் பெற்றுத்தரும்.  ப்ரத்யக்ஷமாக ஸேவிக்க முடியாத இவர்களை நாம் ஆராதிக்க வேண்டியது கூட அவசியமில்லை.  இவர்களிடத்து நம் மனமானது பூர்ணமாக லயித்திருந்தால் போதும்.  அப்படிப்பட்ட அனுக்ரஹ சீலர்கள் இவர்கள்.  நாதமுனி காலமெங்கே..?  நம்மாழ்வார் வாழ்ந்திருந்த காலமெங்கே..?   நம்பிக்கையோடு ஒருமனதோடு தியானித்திருந்த நாதமுனிக்கு நம்மாழ்வார் கடாக்ஷித்துள்ளாரே..? நம்மாழ்வார் காலம் முடிந்தாலும், நாதமுனிகளுக்கு அணுக்ரகாம் செய்ய, ஒரு “பராங்குச தாசரை” அனுப்பி வைத்தாற்போல்.
நாம் அஞ்ஞானத்தினால் மூடப்பட்டு ஆச்சார்யனை மறந்து அதனால் தெய்வத்தையும் மறந்து, தேஹத்தையும் அது மூலம் ஏற்படும் சுகத்தினையும் பெரிதாய் எண்ணி ஒருவித அஞ்ஞானமயக்கத்தில் உள்ளோம்.
 
வைதீக கார்யம் மட்டும் இல்லை, லௌகிகத்தில் கூட, வீட்டில் நடக்கும் விவாஹம், சீமந்தம் என்று எல்லாவற்றிற்கும், ஆசார்யனே பொறுப்பேற்று நடத்தி வைக்கும் அழகு, ஸ்ரீவைஷ்ணவ சம்பரதாயத்தின் தனிச்சிறப்பு. யாராலும் சொல்லி முடிக்க முடியாத ஆச்சர்ய வைபவம், ஆச்சார்யா வைபவம். 
 
பரம பக்தியுடையவர்களாய்  பகவானோடு இரண்டற கலந்த நம் ஸதாச்சார்யர்களை சதா நினைத்து அனுபவிக்கப்பெற்ற பாக்கியவான்களுக்கு பரமபதப்ராப்தியைப் பற்றி கவலையே படவேண்டியதில்லை.  ஸதாச்சார்ய கடாக்ஷத்தினால் எப்படி இங்கு நிரந்தர அனுபவம் கிடைக்கின்றதோ அது போன்று அவர்களின் அந்திமகாலத்தில் பகவத் சிந்தனையும், பரமபத ப்ராப்தியும் தானாகவே வந்து வாய்க்கும்.   அவர்கள் சரீர சம்பந்தம் விலக வேண்டியதுதான், தாமதமின்றி நித்யசூரிகள் அவர்களை பரமபத்த்திற்கு அழைத்துப்போக தயாராய் வந்துவிடுவர்.  ஏனென்றால் இந்த பொறுப்பானது ஆச்சார்யனுடையது.  இவர்கள் இதற்கென்றே ஏற்பட்டவர்கள்.  ஜீவன்கள் கடைத்தேற அவதரித்தவர்கள்.   பகவத் கடாக்ஷத்தைக் காட்டிலும் ஆச்சார்ய கடாக்ஷம் மிகவும் விசேஷமானது. 
நாம் செய்யவேண்டியதெல்லாம் ஆச்சார்யனிடத்து பரம விசுவாசமும் பக்தியும் மட்டுமே.  பதிலாக நமக்கு கிடைப்பதோ பேரானந்தமயமான பரமபதப்ராப்தி……!
 
மதிளரங்கரின் பொற்பாதுகைப் பற்றி கடந்த 6 – 7 மாதங்களாக நம் பட்டர் ஸ்வாமி ஸ்ரீ வேதாந்தவாசிரியருடைய ஒப்புயர்வற்ற க்ரந்தமான “ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்” கொண்டு நாம் அனுபவித்து உய்யும்படி செய்து வருகிறார்.
 
இதையும், இதற்குமுன் “பேசும் அரங்கன்” என்ற தலைப்பில் ஸ்வாமி பெரிய பெருமாளாகவே இருந்து நம்மிடையே பேசியவற்றையும், தொடர்ந்து அனுபவித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு புலப்படும். இங்கிருந்து தொடங்குவோம், இதைப்பற்றி பேசுவோம், இத்தோடு பூர்த்தி செய்வோம் என்ற நோக்கு ஏதும் முன் கூட்டியே வரையறுத்துக் கொள்ளாமல்தான், ஸ்வாமி எழுதத் துவங்குவார். ஆம் ! எழுதுவது மட்டும்தான் அவர் கார்யம், பேசுவது பெரிய பெருமாளாயிற்றே ! அர்ச்சா ஸங்கல்பத்தையெல்லாம் மீறி, பெரிய பெருமாள் புரியும் விந்தைகளையும், விநோதங்களையும் அனுபவிப்பவர்களுக்கு இது வியப்பாக இராது.
 
ஆழ்வார் தொடக்கமாக, மணவாள மாமுனிகள் பர்யந்தம், நம் ஓராண் வழி குருபரம்பரையில் வந்த மஹணீயர்களிடத்தே பெரிய பெருமாள் பேசியதும், அவர்களைக் கொண்டு தம் கார்யம் செய்து கொண்டதும், நம் போன்ற ஸாமான்யர்களுக்கு செய்ய வேண்டிய உபதேசங்களை செய்ததும் நாமறிந்ததே. அதே க்ரமத்தில், இன்று நமக்கு “பேசும் அரங்கம்” அமைந்தது என்று கொள்ளத் தட்டில்லை.
 
“ஸ்ரீ பாதுகா ப்ரபாவம்” எழுத துவங்கி இன்று “ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின்” 1008 ரத்தினங்களின் ஒளியையும் ஓர் அளவு நாம் அறியும் படிச்செய்த க்ருபையோடு, இதை பூர்த்தி செய்ய ஸ்வாமி திருவுள்ளம் கொண்டார். ஆனால், சில நாட்களுக்குமுன் பாதுகா ப்ராபாவத்தை விட, அந்த பாதுகையான ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றி ஸ்வாமி அதிகம் பேசியதும், அத்தோடு கூட அடியேன், இந்த விஷய மாற்றத்துக்கு ஒரு முறை காரணம் கேட்டதற்கு, “பாதுகை தான் ஆச்சார்யன் ! ஆச்சார்யன் தான் பாதுகை ! ” என்று பதில் அளித்தார்.
 
அவர் அளித்த பதிலின் தாக்கத்தால், “பாதுகாப்ரபாவம்” பேசிய இந்த பகுதியில், பெரிய பெருமாளின் பாதுகையான பராங்குசரைப் பற்றியும் பேசி முடிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன். அதுவும் “வைகாசி விசாகம்” நெருங்கும் வேளையில் இதைச் செய்வதைக் காட்டிலும் வேறு சிறந்த நேரம் இருக்க முடியாது. “அப்படியானால், இதை நீயேச் செய்” என்று ஸ்வாமியின் நியமனத்தை ஏற்று அடியேனின் சிற்றறிவிற்கு தோன்றுவதை எழுதி ஸ்வாமியின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
 
ஆழ்வாரின் வைபவங்களை அவர்தம் திருவடியாக இருக்கும் ஸ்ரீமதுரகவிகள் தொடக்கமாக பலர் பேசியுள்ளனர். அப்படி பலர் பேசிய ஸ்ரீசுக்திகளையெல்லாம் கொண்டு, ஒன்று திரட்டி ஸ்ரீ பிள்ளை லோகாசாரியரின் திருத்தம்பியரான  ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆழ்வார் விஷயமாக செய்த பெரும் காவியம் “ஆச்சார்ய ஹ்ருதயம்” என்னும் க்ரந்தம். இதுபோல் ஒரு க்ரந்தம் இதற்கு முன் வந்ததில்லை, இனியும் வர வாய்ப்பில்லை என்னும் அளவிற்கு விஷய பூர்த்தி, சொல்லழகு எல்லாம் ஒரு சேரப் பெற்ற க்ரந்தம். இந்த க்ரந்தத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகளைக் கொண்டு ஆழ்வார் வைபவத்தை ஈண்டுச்சிறிது அனுபவிப்போம்.
 
ஆழ்வாரின் அவதாரம்:

ஆழ்வாரின் அவதார விஷேஷத்தை பற்றி நம்மிடையே நிலவும் பல கருத்துக்களை ஆராய்கிறார் நாயனார். யுகங்கள் தோறும் அரங்கன் ஒவ்வொரு வர்ணத்தில் ஒருவருக்கு பிள்ளையாக அவதரித்தான்.
 

 

யுகம்

பெற்றோர்

குலம்

அவதாரம்

கிருதயுகம்

அத்ரி மஹரிஷ ஜமதக்நி

 அந்தணர்            

அந்தணர்

தத்தாத்ரேயர்     பரசுராமர்

த்ரேதாயுகம்

தசரத சக்ரவர்த்தி

க்ஷத்ரியர்

ஸ்ரீராமன்

த்வாபரயுகம்

வசுதேவ நந்தகோபர்கள்

வைஸ்யர்

ஸ்ரீக்ருஷ்ணன்

 


இதன் தொடர்ச்சியாக கலியுகத்தில் வேளாளர் குலத்தில் காரி-உடையநங்கையாருக்கு மகனாக ஸ்ரீசடகோபராக எம்பெருமானே அவதரித்தானோ? என்று ஒரு சாரார் கருதுவர்.
 
வேதங்களை தொகுத்தல் போன்ற சில அரிய செயல்களைச் செய்ய வ்யாச பகவான் பேரில் ஆவேசித்தான் அரங்கன். அதுபோலே, இவரைக் கொண்டு தமிழ் மறையை வெளிப்படுத்துவதற்காக இவர் பேரில் ஆவேசித்தானோ ? என்றும் ஒரு சாரார் கருதுவர்.
 
இதெல்லாம் இல்லை; பரமபதத்தில் உள்ள நித்ய சூரிகளில் ஒருவர் அல்லது முக்தர்களில் ஒருவர், அல்லது அந்த ஸ்தானத்திற்கு ஒப்பான “ஸ்வேத த்வீப” வாசிகளில் ஒருவர், நம்மைத் திருத்த ஆழ்வாராக அவதரித்தார்களோ ? என்றும் ஒரு சாரார் கருதுவர்.
 
( “ஸ்வேத த்வீபம்” என்பது திருப்பாற்கடலுக்கருகில் உள்ள ஒரு “வெள்ளைத் தீவு”. பெரிய பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்யும் அர்ச்சகர்கள் இங்கிருந்து வந்தவர்கள் என்பது நம்மில் பலரும் அறியாத ரகசியம். அரங்கனை ஆராதிக்கும் இவர்கள் ஆழ்வாருக்கு ஒப்பானவர்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.)
 
இந்த காரணங்கள் ஏதும் இல்லை, நம்மைப் போன்று சம்சாரிகளில் ஒருவர் முற்பிறவி பலனாக இப்படி திருந்தினாரோ? என்று கருதுபவர்களும் உண்டு.
 
இதையெல்லாம் விட சிறந்த காரணமும் ஒன்று உண்டு. யாதொரு காரணத்தையும் பற்றாத எம்பெருமானின் “நிர்ஹேதுகமான க்ருபை” (causeless mercy) என்னும் அருளின் சிறப்பினால், அரங்கன் ஒருவனையே பலனாக, எண்ணியிருந்து பலிக்கப் பெற்றவர் என்று ஆழ்வாரை கருதுவோரும் உண்டு.
 
ஆக இப்படியெல்லாம் பல கருத்துக்கள் நிலவுவது ஆழ்வாரின் சிறப்பையே காட்டும். இன்னதென்று வரையறுத்து சொல்ல முடியாத சிறப்பு அது ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு.
இவரைத் தொடர்ந்து வந்த ஆச்சார்யர்களும் அப்படியே. அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையே உருவானவர்கள். பெரிய பெருமாளின் பாதுகையாகவே இருந்து, நமக்கு ஸம்ஸாரமாகிற கடற்கரையில் நின்றும் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள்.
இனி இவர்களின் “அருளின் தன்மையை” அடுத்து அனுபவிப்போம்.
 
பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
நாயனார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்
!!
 

June 6, 2009

Pesum Arangam – 76

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 8:49 pm

திருதராஷ்டிரனுக்கு,  பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய விஸ்வரூப தரிசனத்தையும்,  ஸ்ரீகீதா உபதேசத்தினையும்,  தாம் வெகுதூரத்திலிருந்தாலும், சஞ்சயன் தமது யோகத்ருஷ்டியினால் அறிந்து அவருக்கு அறிவிக்கின்றான்.  அதுபோன்று,  பாதுகையினைப் பற்றிய பெருமைகளை,  பாதுகையின் சூக்குமமாகயிருக்கும் நம்மாழ்வரின் மஹிமையை,  ஆழ்வார் ஆச்சார்யர்களின் உபதேசங்களை,  புகழை,
இந்த அற்புத பாமாலை பாதுகா ஸஹஸ்ரம் மூலமாய் நமக்கு உபதேசிக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.
 
அற்புதமான இந்த அம்ருதவர்ஷத்தினை பொழிந்து விட்டு கடைசியில் அவர் பகவானைக் கூட வேண்டவில்லை..!  நம்மிடத்து வேண்டுகின்றார்..!
 
யதி ஸ்பீதா பக்தி:   ப்ரணயமுக வாணீ பரிபணம்
பத்த்ராண ஸ்தோத்ரம் ஹ்ருதி பிப்ருத ரங்க்க்ஷிதி ப்ருத: !
நிருந்மாதோ யத்வா நிரவதி  ஸுதா நிர்ஜ்ஜரமுசோ
வசோபங்கீ ரேதா:  ந கதமநுருந்தே ஸஹ்ருதய:  !! 1007 !!
 
ஸ்பீதா=பூர்ணமான – பக்தி:=(பாதுகையினடத்தில்) பக்தியானது – யதி=உங்களுக்கு இருக்குமேயானால் – ப்ரணயமுக=நம்பிக்கையைக் கொடுக்கிறதாக இருக்கும்  – வாணீ=வேதத்தை – பரிபணம்=வேதம் என்ன சொல்லுகின்றதோ அதனையே பிரதிபலிக்கும் – பதத்ராண ஸ்தோத்ரம்= இந்த பாதுகா ஸ்தோத்திரத்தை – ஹ்ருதி=ஹ்ருதயத்திலே – பிப்ருத=தரியுங்கோள் (நன்கு உரு ஏற்றி மனதில் நிலைத்திருக்கும்படி செய்யுங்கள்) – யத்வா=இல்லாவிட்டால் (ஒருக்கால் அப்படியெல்லாம் உங்களுக்கு பக்தியில்லாவிட்டாலும்) – நிருந்மாதோ=சாமான்யமான பக்தியுடைய  – ஸஹ்ருதய:=நல்லமனதோடுள்ள ஒருவன் – நிரவதி=முடிவில்லாததான – ஸுதா=அம்ருதத்தினை ஒக்கும் – நிர்ஜ்ஜர=வெள்ளத்தினை – முச:=கொட்டுகிறதான – ஏதா= இந்த – வசோபங்கீ= வார்த்தைகளுடைய இன்பமான பதங்களின் சேர்க்கையை – கதம்=எப்படி – நாநுருந்தே=அனுபவிக்காமலிருப்பான்..?
 
”ஹே! ஜனங்களே!  நீங்கள் உய்வடைய எளிமையான பரமஹிதமான ஒரு வழியைக் கூறுகின்றேன்! கேளுங்கள்! 
 
இந்த பாதுகா ஸ்தோத்திரமானது மகத்தானது..! நமக்கு ஸகலவிதமான நன்மைகளும் அளிக்க்க்கூடியது வேதமும் – வேதம் காட்டும் வழியும்தான்!  நீங்கள் நாஸ்திகர்களாய் இல்லாத பட்சத்தில் இந்த வேதத்தினைக் கண்டிப்பாய் நம்பவேண்டும்.!   அந்த வேதம் நாம் உய்வடைய பாதுகைகள்தான் என்று சூக்குமமாய் அறுதியிடுகின்றது!. 
 
அந்த வேத்த்தினுடைய உருவம்தான்,  ப்ரதிபாத்யமான வஸ்துவான பாதுகையினை துதிக்கும் இந்த பாதுகா ஸஹஸ்ரத்தினை தினசரி பாராயணம் செய்யுங்கள்.   இதுதான் பரம ஹிதத்தினைத் தரக்கூடியது!. இதுவே பரமபலம் – இதுவே பரமக்ஷேமம் – ஒருக்கால் உங்களுக்கு அப்படிப்பட்ட அனுபவிக்க்க்கூடிய பக்தியில்லையென்றாலும்,  இதிலுள்ள வார்த்தைகளின் கோர்வை – காதிற்கும் வாக்கிற்கும் இனிமையான ஸப்தரசங்களின் தன்மையினை அனுபவித்து உருப்போடுங்கள் –
 
அறிந்தோ அல்லது அறியாமலோ எப்படி நெருப்பைத் தொட்டால் அதனுடைய ஸ்வபாவமானது நம்மை சுடுகின்றதோ அதைப்போன்று நாம் பக்தி மேலிட்டோ அல்லது இதிலுள்ள இனிமையான ரஸஞானத்தினால் ஈர்க்கப்பட்டோ இதனை அப்யாஸிக்கத் தொடங்குவீர்களாயின்,  பாதுகையின் ஸ்வபாவமான மஹிமையினால்,  கருணையினால் ஸகல க்ஷேமங்களையும் பெற்று இவ்வுலகிலும், பரம ஸ்ரேயஸ்ஸான மோக்ஷத்தினையும் பெற்று உய்வீர்கள்.  இது ஸர்வோப ஜீவ்யமான அம்ருதம்.    ஏதோ ஒருவித்த்தில் இதனை அனுஸந்தித்தாலும் போதும் – பரமக்ஷேமத்தினையடைவது உறுதி!.”    என்று நாம் உய்வதற்காக நம்மை
பிரார்த்திக்கின்றார் இந்த பரமதயாளு – ஸ்வாமி தேசிகர்.

 
பாதுகைதான் நம்மாழ்வார்.  நம்மாழ்வார்தான் பாதுகை!
ஸ்வாமி தேசிகரின் இந்த பாதுகையின் ப்ரபாவமானது நம்மாழ்வாரின் அவதாரதினத்தினமான இன்று (வைகாசி-விசாகம் 5.6.2009) பூர்த்தி பெறுகின்றது.  இந்த ப்ரபாவத்தின் முடிவுரையை என் அருமை நண்பரும், வைணவப் பிரகாசரும் ஆன திரு. மதுராமாநுஜம் அவர்கள் எழுதுகின்றார்.  

 

June 5, 2009

Pesum Arangam – 75

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 8:39 am

Chapter-75
29th May’2009

பக்தி என்பது ஊட்டி வளர்த்துதான் வரவேண்டும் என்பதில்லை. பரம நாஸ்திகனாய் இருந்தவர்களில் பலபேர் சில வினாடி நெகிழ்வுகளில், பகவானின் அற்புதங்களினால், அனுகிரஹத்தினால் பக்தி பிழம்பாய் மாறியுள்ளார்கள். சில மஹான்களின் அண்மை, காருண்யம் பலரை மாற்றியுள்ளது. சில சொற்கள் பலரை பாதித்து ஆன்மீகத்திற்கு திருப்பியிருக்கின்றது. இதுபோல நன்கு பக்தியோடு வளர்ந்தவர்கள், சில சூழ்நிலைகளாலோ, சந்தர்ப்பங்களாலே அல்லது சில சிந்தனை தூண்டுதலாலோ நாஸ்திகர்களாயும் மாறியுள்ளார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பிரபல எழுத்தாளர், அவரிடத்திலுள்ள பல கெட்ட பழக்கவழக்கங்கள், ஒரு மஹான் அவரை தொட்ட மாத்திரத்தில், அவரை விட்டு விலகின. ஒரு க்ஷண நேர ஸ்பரிஸம் ஒரு மாயாஜாலத்தினையே நிகழ்த்தியுள்ளது.

மனதளவில் தீயவனாய் இல்லாமல் இருந்தால் போதும். அவனருள் கண்டிப்பாய் வந்து சேரும்.

துருவன் ஒரு சிறு பாலகன். ஏதுமறியாத குழந்தை. பகவானிடத்துள்ள பக்தி மிகுந்து அக்குழந்தை தபஸ் செய்கின்றது. துருவனின் தபஸ்ஸினால் பகவான் நேரில் காட்சியளிக்கின்றான். ப்ரத்யக்ஷமாக பகவானைக் கண்ட அக்குழந்தைக்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை. திக்குமுக்காடி போனது. வாயார ஸ்தோத்திரம் பண்ணமுடியவில்லை. பதறியபடியே பகவானிடத்து அக்குழந்தை, ”ஸ்தோதும் த்வாமஹமிச்சாமி தத்ர பிரக்ஞாம் ப்ரயச்ச மே” – ” உன்னை ஸ்தோத்திரம் பண்ணவேண்டும் என்று மிகுந்த ஆவலாயுள்ளது! எனக்கு சொல்லத் தெரியவில்லையே ப்ரபோ! அதற்குண்டான ஞானத்தைக் கொடேன்!“ என்று கெஞ்சியது. இந்த பிரார்த்தனையால் நெகிழ்ந்து போனான் பரந்தாமன்!. தன்னுடைய பாஞ்ச்சன்னியமாகிய சங்கைக் கொண்டு துருவனது முகத்தினை வருடினான்!. திவ்யஞானமும் உண்டாகி ஸ்தோத்திரம் செய்தது அக்குழந்தை!.

துருவனை பாஞ்ச்சன்யத்தினால் வருடியதைப்போன்று, தேசிகரை ஸ்ரீபாதுகாதேவி அரங்கனின் அர்ச்சகர் மூலமாய் தேசிகரின் சிரஸ்ஸினை தீண்டி சற்று நேரம் அவரது சிரஸ்ஸில் அமர்ந்து அனுகிரஹித்துள்ளாள். ஸ்ரீபாதுகையின் ஸ்பரிஸம் ஸ்வாமி தேசிகரிடத்து ஒரு அற்புத நெகிழ்வை, உணர்வை, ஊக்குவிப்பை, உந்துதலைத் தந்தது. கருத்துள்ள கவிமழையை
கார்மேகமாய் ஒரு ஜாமத்திற்குள் பொழிந்து தள்ளிவிட்டார்.

ப்ருதுக வதந சங்க ஸ்பர்ஸ நீத்யா கதாசித்
சிரஸி வினிஹிதாயா: ஸ்வேந பூம்நா தவைவ !
ஸ்துதிரிய முபஜாதா மந்முகேநேத்யதீயு:
பரிசரண பராஸ்தே பாதுகே பாஸ்த தோஷா: !!

ப்ருதுக=பாலகனுடைய (துருவனுடைய) – வதந=முகத்திலே – சங்கஸ்ப்ர்ஸ நீத்யா=ஸ்ரீபகவானுடைய பாஞ்சஜன்யம் என்னும் சங்கத்தின் ஸ்பர்ஸத்தினால் ஏற்பட்டதை (ஏற்பட்ட மாறுதலைப்) போன்று – கதாசித்=ஒரு சமயத்தில் (ஸ்ரீரங்கநாதன் இந்த ப்ரபந்த்த்தை பண்ணும்படி அனுமதி கொடுக்கும் சமயத்தில்) – சிரஸி=என்னுடைய சிரஸ்ஸில் – விநிஹிதாயா=(அர்ச்சகரால்)நன்றாக சாதிக்கப்பெற்ற – தவ=உன்னுடைய – ஸ்வேன=ஸ்வாபிகமான – பூம்நா ஏவ=மஹிமையினாலே – மந்முகே=என்முகமாக (அதாவது என்னை ஒரு கருவியாக்க் கொண்டு) – ஈயம் ஸ்துதி= இப்படி உயர்ந்த்தான ஸ்தோத்திரமானது – உபஜாதா = உண்டானது –– அபாஸ்த தோஷா:=த்வேஷங்கள் அற்றவர்களான – பரிசரணபரா=உன்னுடைய கைங்கர்யங்களில் ஈடுபாடுள்ள பெரியோர்கள் –
இதி அதீயு:= எண்ணக்கடவர்கள் (அதாவது வேத்த்தினை அத்ய்யனம் செய்வது போல் சிரத்தையுடன் இதை நித்யமாக பாராயணம் செய்யக்கடவர்கள்.

ஹே! பாதுகே! இந்த ஸஹஸ்ரத்தை நான் பண்ணுவதற்கு முன் நியமனம் கேட்பதற்காக உன் ஸந்நிதியில் நின்றபோது, துருவனை பாஞ்சஜன்யத்தினால் பகவான் வருடியதை போன்று, அர்ச்சகாள் மூலமாய், என் தலையில் நீ சாதிக்கப்பெற்று வெகுநேரம் எழுந்தருளி அனுமதியளித்தாய்! உன் மூலமாக உன்னை ஸ்தோத்திரம் பண்ணும்படியான ஞானத்தினையும் வாக்கினையும் அளித்தாய்!. உன்னுடைய ப்ரபாவத்தினாலேயே உன்னை ஸ்தோத்திரம் பண்ணும்படியான ஞானம் எனக்கு ஏற்பட்டது!. உன்னுடைய அனுக்ரஹரூபமாக தானாக வெளிப்பட்டது!. பெரியோர்கள் இந்த உண்மையை உள்ளபடி அறிந்து, வேத்த்திற்கு சமமாக பாவித்து சிரத்தாபக்தியுடன் தங்களுடைய நித்யபாராயணத்திற்கும் வைத்துக் கொண்டு விடுவார்கள். இந்த ப்ரபந்தம் உன்னால் ஏற்பட்டது. எல்லோராலும் கொண்டாடத்தக்கது.

பாதுகையும் நம்மாழ்வாரும் ஒன்றுதான்! நம்மாழ்வார்தான் பாதுகை! பாதுகைதான் நம்மாழ்வார்!. இந்த பாதுகா ஸஹஸ்ரமும் நம்மாழ்வாரின் அனுக்ரஹத்தினால், வேதம் தமிழ் செய்த மாறனின் திவ்ய கடாக்ஷத்தினால் ஏற்பட்டது என்கிறார் ஸ்வாமி தேசிகர்!.
———-

swamin dasan,

on reading your pesum arangam dt.29/05/2009, i would like to share my
views with you :

Muthal THIRUVAAYMOZHI, mundram patthu, muthal pattu (1-3-1) (sri.namamazwar aruliyathu)

pathuudai adiyavargu eliyavan; perarku ariyavidakan….

pagthi udayavargaluku elimaiyai eruppan, pagthi
illathavargaluku pulappadan. (we can see this in our practical life
for so many times). he helps us during our critical situation.

this point coincides with your article.

apthan

May 30, 2009

Pesum Arangam – 74

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:06 am

 Chapter-74
23rd May’2009
 

நல்ல ஆச்சார்யர்கள் நமக்கு கிடைப்பது என்பது,  நமக்கு பாக்யம் இருந்தால் மட்டுமே சாத்யமாகும்.   நாம் எண்ணியபடி கிடைக்காது போனால், நமக்கு பாக்யமில்லாது போயின் என்ன செய்யலாம்.?

 

நம்முடைய பூர்வாச்சார்யர்களை  ஒருமனதோடு தியானிப்பதும்,  அவர்களை நம்முடைய ஸவப்னத்தில் தரிசிக்கப் பெறுதலும் நமக்கு பகவத்கிருபையைப் பெற்றுத்தரும்.  ப்ரத்யக்ஷமாக ஸேவிக்க முடியாத இவர்களை நாம் ஆராதிக்க வேண்டியது கூட அவசியமில்லை.  இவர்களிடத்து நம் மனமானது பூர்ணமாக லயித்திருந்தால் போதும்.  அப்படிப்பட்ட அனுக்ரஹ சீலர்கள் இவர்கள். 

 

நாதமுனி காலமெங்கே..?  நம்மாழ்வார் வாழ்ந்திருந்த காலமெங்கே..?   நம்பிக்கையோடு ஒருமனதோடு தியானித்திருந்த நாதமுனிக்கு நம்மாழ்வார் கடாக்ஷித்துள்ளாரே..?

 

நாம் அஞ்ஞானத்தினால் மூடப்பட்டு ஆச்சார்யனை மறந்து அதனால் தெய்வத்தையும் மறந்து, தேஹத்தையும் அது மூலம் ஏற்படும் சுகத்தினையும் பெரிதாய் எண்ணி ஒருவித அஞ்ஞானமயக்கத்தில் உள்ளோம்.

 

பரம பக்தியுடையவர்களாய்  பகவானோடு இரண்டற கலந்த நம் ஸதாச்சார்யர்களை சதா நினைத்து அனுபவிக்கப்பெற்ற பாக்கியவான்களுக்கு பரமபதப்ராப்தியைப் பற்றி கவலையே படவேண்டியதில்லை.  ஸதாச்சார்ய கடாக்ஷத்தினால் எப்படி இங்கு நிரந்தர அனுபவம் கிடைக்கின்றதோ அது போன்று அவர்களின் அந்திமகாலத்தில் பகவத் சிந்தனையும், பரமபத ப்ராப்தியும் தானாகவே வந்து வாய்க்கும்.

 

அவர்கள் சரீர சம்பந்தம் விலக வேண்டியதுதான், தாமதமின்றி நித்யசூரிகள் அவர்களை பரமபத்த்திற்கு அழைத்துப்போக தயாராய் வந்துவிடுவர்.  ஏனென்றால் இந்த பொறுப்பானது ஆச்சார்யனுடையது.  இவர்கள் இதற்கென்றே ஏற்பட்டவர்கள்.  ஜீவன்கள் கடைத்தேற அவதரித்தவர்கள்.

 

பகவத் கடாக்ஷத்தைக் காட்டிலும் ஆச்சார்ய கடாக்ஷம் மிகவும் விசேஷமானது. 

 

நாம் செய்யவேண்டியதெல்லாம் ஆச்சார்யனிடத்து பரம விசுவாசமும் பக்தியும் மட்டுமே.  பதிலாக நமக்கு கிடைப்பதோ பேரானந்தமயமான பரமபதப்ராப்தி..!

 

May 22, 2009

Pesum Arangam – 73

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:57 pm

Chapter-73
16th May’2009

ஒருவனுக்கு பெரும் புதையல் கிடைத்தப் பின்னும் பிச்சைக்கு அலைவானாயின் என்ன சொல்வது..? அவனைப் போன்ற மூடன் எவனும் உண்டோ..?

யாரொருவருடைய திவ்யகடாக்ஷத்தினால் ஜீவராசிகள் மோக்ஷபர்யந்தமான ஐஸ்வர்யங்களை அடைகின்றார்களோ அத்தகைய லோகமாதா, மஹாலக்ஷ்மியோடு கூடினவராய், தன்னை ஆஸ்ரயிப்பவர்களுக்கு வாத்ஸல்யராய், சுலபராய், எளியவராய், இந்த ரங்கவிமானத்தில் குடிகொண்டு, ஸர்வ அபீஷ்டங்களையும் தரும் மஹாநிதியாம் நம்பெருமாளை, நாம் பாதுகையின் மூலமாக அடைந்தபிறகு, அல்ப சுகத்திற்கும், அல்ப தனத்திற்கும், அல்ப பலன்களுக்கும் எவரையேனும் நாடுதல் தகுமோ..?

கற்பகவிருக்ஷத்தின் கீழ் அமர்ந்து கஞ்சிக்கு பறப்பவர் உண்டோ..?

அபரஸ்பரபாதிநா மமீஷாம்
அநிதம்பூர்வ நிரூட ஸந்ததீநாம்
பரதவ்யஸநாத் அநூநஸீம்நாம்
துரிதாநாம் மம நிஷ்க்ருதிஸ்த்வமாஸீ: !975!

அபரஸ்பர=எப்பொழுதும் – பாதிநாம்=மேன்மேலும் வ்ருத்தியடைகின்றதும் – அநிதம்பூர்வம்=இதுதான் முதல் என்றில்லாமல் அநாதியானதும் – நிரூட=த்ருடமானதும் – ஸந்த்தீநாம்=வரிசைகளையுடைத்தாயிருக்கிறதும் – பரத:=ஸ்ரீபரதாழ்வானுடைய – வ்யஸநம்=துக்கத்தைக்காட்டிலும் – அநூந: அதிகமான – ஸீம்நாம்=எல்லையை உடைத்தாயிருக்கிறதுமான – மம=என்னுடைய – துரிதநாம்=பாபங்களுக்கு – நிஷ்க்ருதி=இல்லாமல் – த்வம்=நீ – ஆஸீ:=ஆக்குகின்றாய்.

ஹே! பாதுகே! பரதாழ்வான் இராமனைப் பிரிந்து எவ்வளவு வருந்தி துடித்திருப்பான்?
இந்த துக்கம் அவனுடைய பாபத்தினால் அன்றோ ஏற்பட்டிருக்க வேண்டும்.
அத்தகைய பரதனைக் காட்டிலும் மிகக் கடுமையான பாபி நான்!
ஆனாலும் பரதனது பாபங்கள் அனைத்தும் அவன் உன்னையடைந்ததும், ஒரு நொடியில் நசித்து போயிற்று.! அதுபோன்று நானும் உன்னையடைந்து உன் பரிபூர்ண கடாக்ஷத்தினை பெற்றபின்பு அநாதியான என்னுடைய மாளாத வல்வினைகள் அப்போதேயன்றே நசித்துப் போயிருக்கக் கூடும்..! மோக்ஷத்தினை அடையப் பெற்றவனாக(முக்ததுல்யனாக) அன்றோ நான் உன்னை இப்போது அனுபவிக்கின்றேன்!

பாதுகைகளையோ, ஆழ்வார் ஆச்சார்யர்களின் திவ்ய சூக்திகளை யாரொருவர் த்யானம், ஆராதனம் முதலானவைகளைச் செய்து ஆராதிக்கின்றார்களோ அவர்களது மனதில் பாப எண்ணங்களேத் தோன்றாது. எப்படி பகவானோ அப்படியேதான் ஆழ்வார் ஆச்சார்யர்களும்!. மனமது, மமதையற்று தீதற்றுயிருப்பின், அந்த பாகவதனின் உள்ளம் ஒரு கோவிலாகும். இறை கூத்தாடும் கூடமாகும். மோக்ஷம் கைகூடும்.!

மாடமாளிகை சூழ் திருமங்கை மன்னன்
ஒன்னலர் தங்களை வெல்லும் *
ஆடல் மாவலவன் கலிகன்றி
அணிபொழில் திருவரங்கத்தம்மானை *
நீடுதொல் புகழாழி வல்லானை
எந்தையை நெடுமாலை நினைந்த *
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்!
பாட நும்மிடை பாவம் நில்லாவே *
-திரு.226-

ஏ! திருமால் அடியவரான தொண்டர்களே! ஆழ்வார் அனுபவித்த அந்த உணர்வுநிலை உனக்கு இல்லையாயினும், நெடுமாலாம் திருமால், திருவரங்கத்தில் கோயில் கொண்ட பெருமாளை, நீடுதொல் புகழ் ஆழி வல்லானை, “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” எல்லா தீவினைகளிலிருந்தும் ரக்ஷிக்கின்றேன் என்று தன்னுடைய அபயஹஸ்த்தினால் குறிப்பால் உணர்த்திக் கொண்டிருக்கும், நம்பெருமாளைப் பற்றிய கலிகன்றியின் (தீவினைகளுக்கு எதிரான) இப்பாசுரங்களை சிரத்தையோடு பாடுங்கள்!

பாடும் நும்மிடையே பாபங்கள் எதுவும் நில்லாது நசித்துப் போகும்!

May 13, 2009

Pesum Arangam – 72

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 10:45 am

 Chapter-72
 
11th May’2009
 
காலே ஜந்தூந் கலுஷகரணே க்ஷிப்ரமாகாரயந்த்யா:
கோரம் நாஹம் யமபரிஷதோ கோஷமாகா்ணயேயம்
ஸ்ரீமத் ரங்கேஸ்வர  சரணயோ: அந்தரங்கை: ப்ரயுக்தம்
ஸேவாஹ்வாநம் ஸபதி ச்ருணுயாம் பாதுகாஸேவகேதி !!969!!
 
கலுஷ=கலங்கியிருக்கின்ற – கரணே=இந்திரியங்களுடைய – காலே=செத்துப் போகிற காலத்திலே – ஜந்துாந்=ஜந்துக்களை (ஜீவன்களை) – க்ஷிப்ரம்=சீக்கிரமாக – ஆகாரயந்த்யா:=அழைக்கிறதாயிருக்கின்ற – யமபரிஷத:=யமக்கூட்டத்தினுடைய – கோரம்=பயத்தையுண்டுப் பண்ணுவதான – கோஷம்= இரைச்சலை – அஹம்=நான் – நாகர்ணயேயம்=கேட்கமாலிருக்க வேண்டும்.  – ஸ்ரீமத்=மஹாலக்ஷ்மியோடு கூடிய – ரங்கேஸ்வர=ஸ்ரீரங்கநாதனுடைய – சரணயோ:=திருவடிகளுக்கு – அந்தரங்கை:=அந்தரங்கமாய் – ப்ரயுக்தம்= சொல்லப்படுகின்ற – பாதுகாஸேவகேதி= பாதுகா ஸேவகரே என்று – ஸேவா=ஸேவைக்காக – ஆஹ்வானம்=பகவத் ஸந்நிதிக்குள் அருளப்பாடிட்டு (என்னை)அழைப்பதை – ஸபதி=சீக்கிரமாக – அஹம்=நான் – ச்ருணுயாம்=கேட்கவேண்டும்.
 
ஹே பாதுகே!  உன்னுடைய அனுக்ரஹத்தினால் எனக்கு இந்த சரீரசம்பந்தமானது சீக்கிரத்தில் நீங்கப்போகின்றது..! அந்த சமயத்தில் எனக்கு நீ செய்யவேண்டிய ஒரு காரியத்தினை நான் இப்போதே வேண்டிக் கொள்கின்றேன்..!  என்னுடைய இந்திரியங்கள் யாவும் செயலிழந்து  போனாலும் போகலாம்.!  இறக்கும் தருவாயில் பகவானுடைய நாமத்தினைச் சொல்வதற்கோ நினைப்பதற்கோ முடியாமல் போனலும் போகலாம்..!  அந்த சமயத்தில் யமதூதர்கள் வந்து “பாபி! சீக்கிரம் கிளம்பு..” என்று பயங்கரமாக அதட்டி ஆர்ப்பரிக்கும் படியாக இருக்கக்கூடாது.    நான் வாங்கிய விருதுகள் எதுவும் என் மரணத்தின் போது உதவாது.   நீ இப்போதே,  நான் உன்னை ஸேவிக்கவரும்போது “ஸ்ரீமத் ரங்கநாத பாதுகா ஸேவகருக்கு அருளப்பாடு” என்று அரங்கனின் மூலஸ்தானத்தில் கைங்கர்யம் செய்பவர்களால் அருளப்பாடிட்டு அழைக்கும்படிச் செய்ய வேண்டும்.    இவ்வாறு அழைக்கப் பெறுவேனாயின்  உலகத்தாரிடையே இந்த பெயர் பிரபலமாகும்.   என் உயிரானது பிரிய தவிக்கும்போது என் பக்கத்திலுள்ள ஜனங்கள் “ஸ்ரீமத்ரங்கநாத பாதுகா ஸேவகரின் உயிரானது தவித்துக் கொண்டிருக்கின்றது.”  என்று எனக்கு வழங்கப்பட்ட இந்த பெயரையும் சேர்த்துச் சொல்லுவார்கள்.    இதனைக் கேட்கும் யமதூதர்கள், “நல்லவர்களோ கெட்டவர்களோ பகவானை ஆஸ்ரயித்தவர்களின் (ஸ்ரீவைஷ்ணவர்களின்) ஸமீபத்தில் கூட போகதீர்கள்.  அது மிகவும் அபாயமானது”  என்ற எமதர்மராஜாவின் ஆக்ஞைப்படி விலகி ஓடிவிடுவார்கள்.  யமவாதனை என்னை வாட்டமலிருக்க இதுவே உபாயம்.!
ஆகையினால் நீ அப்படிச் செய்ய வேணும்..!
 
அணியார் பொழில்சூழ் அரங்கநகரப்பா ! *
துணியேன் இனி நின்னருளல்லது எனக்கு *
மணியே மணிமாணிக்கமே!  மதுசூதா!*
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ!

                                                     -திருமங்கையாழ்வார் – திரு.232-

அழகும் திரட்சியும் மிக்க சோலைகளின் நடுவே உகப்புடன் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே!  களைப்பைப் போக்கி கண்குளிரும்படி ஸேவை தந்தருளும் கருமணியே!  வடிவழகு மட்டும் இல்லாமல் பெரும் வாத்சல்யமும், அருளும், குணமும் கொண்ட குணக்குன்றே!  இனி நான் நின்னருள் அல்லாது வேறு துணையை நாடமாட்டேன்.!  போர்களத்தில் வருந்திய அருச்சுனனை நோக்கி, ”உன்னுடைய எல்லாச் சுமைகளையும் எம் தலையில் ஏற்றி வைத்து எம்மையே பற்றுக்கோடாக நினைத்திரு!  நாம் உம் பகைகளை எல்லாம் போக்குகிறோம், “மாகச:’ (வருந்தாதே)” என்று நீ அன்று அருச்சனனைத் தேற்றியது போல,  பரஞ்சோதீயே!  நான் உய்யும் வகையை எனக்குச் சொல்வாயாக! நான் இந்த இன்னல்களிருந்து பிழைத்து வாழும் வகையில் எனக்கு ஒரு வார்த்தை தேவரீர் அருளவேண்டும்! 
 
 
திறம்பேன்மின் கண்டீர்; திருவடிதன் நாமம் *
மறந்தும் புறந்தொழா மாந்தர் * – இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள்“ என்றான் * நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு ..
                                                                 -நான்முகன் திருவந்தாதி-68-
 
 
பகவத் ஸம்பந்தமும், ஆழ்வார்-ஆச்சார்ய ஸம்பந்தமும்,  பகவத் ப்ராப்தியும், ஆச்சார்ய பிரபத்தியும், நாம் செய்யும் அனுஷ்டானங்கள்  மட்டுமே ஒருவனது மரணகாலத்தில் உதவும்.   மற்றபடி வேறு எந்த ஒன்றினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.  நல்ல ஆச்சார்ய ஸம்பந்தத்தினையடைந்தவர்களுக்கு நரகமில்லை..!  யமவாதனையில்லை..!

May 11, 2009

Pesum Arangam – 71

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:27 am

 Chapter-71
 
07th May’2009
 
உண்மையான புருஷார்த்தம் அல்லது உண்மையான பக்தி என்பது எப்படியிருக்கும்..?

பகவானை அனுபவிக்கும் போது சந்தோஷப்படுவர்.  அந்த பகவதனுபவம் தம்மை விட்டு விலகும் போது துக்கப்படுவர்.   
இந்த புருஷார்த்தம் அல்லது பக்தி என்பது பகவான் யாரை இந்த விஷயமாக சங்கல்ப்பித்து இருக்கின்றானோ அவனுக்குத்தான் உண்டாகும்.

அவனுக்கு ஸம்ஸாரத்தில் ஒழிவும்,  உலகியல் இன்பங்களில் வெறுப்பும்,  பகவதனுபவம் மட்டிலும் ருசியாகவும் இருக்கும்.  இதற்காக இவ்விதம் சங்கல்ப்பித்து இருக்கின்றவனை,  பலவிதங்களில் பகவான் பக்குவப்படுத்துவான்.

ஸம்ஸாரிகள், பகவதனுபவத்தைத் தவிர,   எந்த விஷயங்களில்  அதீத ஈடுபாட்டுடன் செய்து சுகிக்கின்றார்களோ,  அதே விஷயங்களில் அலுப்பையும்,  துக்கத்தையும் பகவான் தான் ரக்ஷிப்பதற்காக சங்கல்ப்பித்தவர்களுக்குத்தான் கொடுக்கின்றான்.    இப்படி இருக்கவேண்டும் என்பதை உலகுக்கு இவன் மூலமாய் காட்டிக் கொடுக்கின்றான்.  இதற்காக தான் தேர்ந்தெடுத்த ஸம்ஸாரிகளிடத்து பெரும் அவதியை உண்டாக்குகின்றான். 

யாரொருவர் இந்த ஸம்ஸாரத்தில் அதிக துக்கம் அனுபவிக்கின்றார்களோ அவர்கள்  பகவானால் இந்த ஸம்ஸார சாகரத்திலிருந்து மீட்டு ரக்ஷிக்கப் படுகின்றவர்கள்.   யாரொருவருக்கு  பகவானை மறக்கும்படியாக இந்த ஸம்ஸார வாழ்வு மேன்மேலும் ருசியாகவே இருக்கின்றதோ அவர்கள் மேன்மேலும் இந்த ஸம்ஸாரத்திலேயே தள்ளப்படுகின்றார்கள். 
ஸதாச்சார்யர்கள் மூலமாய் சரியானபடி மோக்ஷார்த்த சரணாகதியை அநுஷ்டித்தவர்கள் விஷயத்தில் மட்டும் எப்படியிருந்தாலும் பகவான் தயையோடு (ஸதாச்சார்யர்கள் ஸம்பந்தத்தினால்) ஸம்ஸார ருசிக்கும்,  ஸம்ஸார பந்தத்திற்கும் காரணமாயுள்ள சகலவித பாபங்களையும் இந்த ஜன்மத்திற்குள்ளேயே கழித்து அவர்களை முடிவில் மோக்ஷத்திற்கே கொண்டு போகின்றார். 

அளவிடமுடியாததும், அழிவில்லாத்தும், எல்லா நற்குணங்கள் நிறைந்த்துமான ஸ்ரீரங்கவிமானத்தில் ஸர்வ சுலபனாயும், ஆஸ்ரித வாத்ஸல்யத்துடனும் குடிகொண்டு ஸ்ரீரங்கநாதன் என்கின்ற மஹாதனத்தினை வைத்துக்கொண்டிருக்கும் பாதுகையை விரும்பி, அதனிடத்தே ஸர்வசுகமும் அனுபவித்துக்கொண்டிருக்கும்படியாகவும் சபலமான நம் மனதை நிறுத்தும்படியாகவும் பிரார்த்திப்போம்.

நம்முடைய பாபத்தினால் அல்ப விஷயங்களில் ருசி உண்டாகி,  அதற்காக அல்ப மனிதர்களைத் தேடி அலைவதைத் தடுத்து ஸ்ரீஆழ்வார் ஆச்சார்யர்களையும், அவர்களது திவ்ய சூக்திகளையும் நினைத்துக் கொண்டிருந்தால் இந்த உலகிலும்,  அவ்வுலகிலும் ஒரு குறைவுமில்லை!.

May 7, 2009

Pesum Arangam – 70

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:17 pm

 Chapter-70
 
05th May’2009
 
யத்யப்யஹம் தரளதீ:  தவ ந ஸ்மரேயம்
ந ஸமர்த்துமர்ஹதி கதம் பவதீ ஸ்வயம் மே !
வத்ஸே விஹாரகுதுகம் கலயத்யவஸ்தா
கா நாம கேசவ பதாவநி ! வத்ஸலாயா:  !!

 
தரளதீ:=சபலபுத்தியுடையவனான – அஹம்=நான் – தவ=உன்னை – நஸ்மேரயம் யத்யபி=நினைக்காமலிருக்கலாம் – பவதீ=நீயாவது – ஸ்வயம்=தானாகவே – மே=என்னை —  நஸ்மர்த்தும்=நினைக்காமலிருப்பதற்கு – கதம்=எப்படி – அர்ஹதி=தகுந்தவளாகிறாய்? – வத்ஸே=கன்றானது – விஹார=விளையாட்டிலே – குதுகம்=ஆர்வமாய் – கலயதி=(துள்ளி குதித்து) விளையாடும் போது – வத்ஸலாயா:=கன்றினிடத்தில் ஆசையுள்ள தாய்பசு —நாம=எப்படியெல்லாம் – அவஸ்தா=அவதிப்படுகின்றது.
 
புதிதாக ஒரு பசு கன்றினை ஈன்றுகின்றது.  அந்த கன்றனாது துள்ளி குதித்து தாய்பசுவினை விட்டு சில அடிகள் நகர்ந்தால் கூட தாய்பசுவானது படாதபாடு பட்டுவிடும்!.  உறுமும்..!  கன்றைத் தொடர்ந்து ஓடும்..!  கன்றுக்கு என்ன ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தினால் கன்றுக்கு அருகே வருபவர்களை முட்டப் போகும்..!  ஒரு மிருகத்திற்கு இவ்வளவு வாத்ஸல்யம் இருக்கின்றதே!    எல்லையில்லாத ஞானம், தயை, வாத்ஸல்யம் முதலிய குணங்களையுடைய  ஹே! பாதுகையே!  நீ  என்னிடத்தில் எப்படியிருக்க வேண்டும்..?   
 
என்னுடைய ஜன்மாந்திரத் தொடர்பினால் வந்த பாபவாஸனையினால்,  இந்த உலகப்பற்று நீங்காமல்,  ஆசையுடையவனாய்,  பற்றுடையவனாய்,
ஸம்ஸார கடலில் போக்யதாபுத்தியினால்  உழன்று,  உன்னை விட்டு விலகி நான் ஓடினால் கூட,  நீ அந்த தாய்பசுவினைப் போன்று என்னை  துடர்ந்து வந்து ,  உன் கடாக்ஷத்தினால் என் பாபங்களைப் போக்கி,   வைராக்கியமான மனதையளித்து,   என் மனதை உன்னிடத்திலேயே நிலைக்கொள்ளுமாறு வைத்திருக்க வேண்டாமா..?   இவ்விதம் செய்யாமல் என்னை ஒதுக்கி வைப்பது உனக்கு அழகா..?  இது தகுமா..?
 
இந்த ஸம்ஸாரருசி என்பது வெறும் ஞானத்தினால்  போகாது.  பகவத் அனுக்கிரஹம் ஒன்றினால் மட்டுமே நீங்கும்.   இந்த பகவத் அனுக்ரஹத்தினை  ஆச்சார்யன் சம்பந்தமானது மிகவும் எளிதாக ஆக்கும். ஆச்சார்யனது வாத்ஸல்யம் இருந்தால் பகவத் அனுக்ரஹம் பரிபூர்ணம்.
 

Older Posts »

Blog at WordPress.com.