Srirangapankajam

March 31, 2009

Pesum Arangam-57

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 12:08 am

 
Chapter-57
30.03.2009
 
அநுபதி பரிரக்ஷந்  ஏக புத்ராதி மாநாத்

புவநமிதமசேஷம் பாதுகே! ரங்கநாத !

நிஜபதநிஹிதாயாம் தேவி! திஷ்டந் வ்ரஜந் வா

த்வயி நிஹித பரோபூத் கிம்  புநஸ்  ஸவாபம் ருச்சந்  !!890!!

 

அசேஷம் : ஸமஸ்தமான – இதம் : இந்த – புவநம் : உலகத்தை – ஏக புத்ராதி : ஓரே பிள்ளையை பெற்றவனுடைய – மாநாத் :மனதைப் போன்று – பரிரக்ஷந் :  காப்பாற்றிக் கொண்டிருக்கின்றரங்கநாத : ரங்கநாதன்நிஜபதிநிஹிதாயாம் : தன்னுடைய திருவடிஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளத்வயி : உன்னிடத்தில்நிஹித: வைக்கப்பட்டிருக்கின்றபர: தன்னுடைய ராஜ்ய பாரத்தினை – அபூத்: ஆனார்.

 

ரங்கநாதன்தான் ஸமஸ்த லோக காரணன்ரக்ஷிப்பதும் அவனே.   இந்த உலகினை அவன் எப்படி ரக்ஷணம் செய்கின்றான் தெரியுமா..?  ஒரேயொரு பிள்ளையைப் பெற்றவன் எப்படி தன் பிள்ளையை பாசமுடன் பேணி, கண்ணும் கருத்துமாய் வளர்ப்பானோ அப்படி கவனமுடன் ரக்ஷணம் செய்கின்றான்.

 

அவனுக்கும் ஓய்வு தேவைதானே..? 

 

சற்றே இளைப்பாறுதல்  வேண்டும்தானே..? 

 

அப்போது தமக்கு நிகராக யார்  இந்த பாரத்தினை  தனக்கு நிகரான கவனமுடன் கையாளுவார்..? 

 

தம்முடைய பாதுகைகள்தான் என்று ரங்கநாதனுக்கு  புரிகின்றது..! 

 

எனினும் பாதுகைகளின் மீது தான் ஏறி நின்று தன்னுடைய பாரத்தினைத் தாங்கும் உறுதி பாதுகைக்கு இருக்கின்றதா?  என்று பரிக்ஷித்துப் பார்க்க விரும்புகின்றான்.  

 

முதன் முதலாக தயங்கி தயங்கி கூச்சமுடனே தம் பாதங்களை குறுக்கிக் கொண்டு  ஒரு வித வாஞ்சையோடு எழுந்தருளுகின்றான்…!.  

 

நிறைவுறுகின்றான்..!.  

 

அதன் பின்னரே இந்த லோகரக்ஷணார்த்தை பாதுகையிடம் அளிக்கின்றான் அவன். 

 

இதனை ஸ்வாமி தேசிகர், ‘நிஜபதநிஹிதாயாம் தேவி! த்வயி நிஹித பர:’  என்ற அற்புதமான  பத்த்தினால்  விசேஷமாய் அலங்கரிக்கின்றார் இந்த பாசுரத்தினை!.

 

இப்போது ஒரு விஷயம் நமக்குப் புரிகின்றது!  இராமன் பாதுகையை இப்பாரதம் ஆள  சற்றும் யோசிக்காமல் அனுப்பியது ஏற்கனவே அவன் பரிக்‌ஷைச் செய்து திருப்தியடைந்த்தால்தானோ…?

 

பாதுகை என்பது ஆச்சார்யன்தானே..! 

 

ஒரு நல்ல ஆச்சார்யன் எப்படி உருவாகுகின்றார்..?

 

சாமான்யமாய் ஜனங்களுக்குக் கஷ்டம் தொடர்ந்து நேர்ந்தால் என்ன ஆகும்?  ஒரு குறிப்பிட்ட காலம் வரை கடவுளே காப்பாற்று! காப்பாற்று!  என்று வேண்டுவர்! சற்று காலம் கடுமையானால் கதறுவர்!  அந்த காலமும் கடந்து ஏதும் பலன் காணவில்லையென்றால் கடவுளை ஏசுவர்!.   நாஸ்திக வாதம் பேசுவர்.   பெருமாளிடத்து துவேஷ புத்தியும் உண்டாகி இந்த ஸம்ஸார சுக துக்கத்தில் அழுந்தி  வீழ்வர். 

 

நல்ல ஆச்சார்யனாய் உருவாகுபவர்  என்ன கஷ்டம் ஏற்படினும் பெருமாளை மறக்க மாட்டார்கள்.   அவர்களது வைராக்கியமும், பெருமாள் மேலுள்ள பக்தியும் மேன்மேலும் வளரும்.   எப்படி உறுதியாய் வேரூன்றி நிற்கும் மரம் எத்தகைய சூறாவளிக் காற்றையும் தாங்கி நிற்கின்றதோ ஸம்ஸாரத்தில் ஒழிவு ஏற்பட்டு முன்னிலும் அதிக ஈடுபாட்டோடு அவன் தாள் பற்றுவர்.

பாதுகை மேல் ஏறி நின்று எப்படி பகவான் பரிசோதித்து பார்த்து தன்னுள் நிறைவு கொள்கின்றானோ அதுபோன்று ஒரு நல்ல ஆச்சார்யனையும் பெருமாள் பலவிதங்களில் பரிசோதிக்கின்றான். 

 

இவ்விதமான பரிக்ஷைகளில் தேறிய பின்பே நல்லதொரு ஆச்சார்யன் உருவாகுகின்றான்!

  

நம் பூர்வாச்சார்யர்களின் சரித்திரமே எடுத்துக் கொள்வோமே!  எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கின்றனர்….!  

 

கண்கள் பறி போனால் என்ன..! 

 

தம் உயிரே போனால்தான் என்ன…. !

 

தாம் கொண்ட வைராக்கியத்தில் சற்றுகூட தளராது வாழ்ந்து காட்டினர்!     

 

என்னதான் பெருமாள் சாஸ்திராத்தங்களை, மோக்ஷ உபாயங்களை  நேரில் வெளியிட்டாலும்,  தனக்கு ஆத்மாவென்று கொண்டாடும்படியான  ஞானிகளை ஆச்சார்யனாக ஆக்கி அவர்கள் மூலமே இந்த உலகை ரக்ஷித்து அருளுகின்றார்.

 

இவ்விதம் ஸர்வவிதத்திலும் பூர்ணமாக தேறி ஆச்சார்ய பதத்தினை வஹிக்கக்கூடியவர்கள் கிடைப்பது மஹா துர்லபமாகும்.

 

பிரும்மா தனக்கு பிரும்ம பட்டம் கிடைப்பதற்கே எத்தனையோ கோடியுகங்கள் தவமிருந்து பெறுகின்றான்….! 

 

பிரும்ம பட்டம் பெறுவதற்கே இத்தனை பிரயத்தனப்படவேண்டியிருக்க,  பெருமாளுக்கு  ஸம்மான சதாச்சார்ய பட்டத்திற்கு, பெருமாளாகவே ஆவதற்கு  எத்தனை சுகிருதம் பண்ணியிருக்கவேண்டும்..? 

 

எவ்வளவு தவமிருக்க வேண்டும்…? 

 

இத்தகையஆச்சார்யன்  ஒருவனுக்குக் கிடைத்துவிட்டால் அவன் கடவுளையேத் தேட வேண்டாம்.!

 

ஆம்..! நம்மாழ்வாரை அடையப்பெற்ற மதுரகவிகள் அப்படித்தானே இருந்தார்..?

 

நம்பெருமாளே,  ஆச்சார்யனைப் பெற்று சந்தோஷிக்க வேண்டுமென்று,   நல்லதொரு ஆச்சார்யனிடத்து சிஷ்யனாயிருந்து அனுபவிக்க வேண்டுமென்று,  பெரிய ஜீயரான மணவாள மாமுனிகளை ஆச்சார்யனாய் அடைந்தானே..? 

 

 

March 28, 2009

Pesum Arangam-56

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:53 pm

இந்த பூமியானது நாலாபுறமும் கடலால் சூழப்பெற்றது. நாம் வாழும் இந்த பூமிக்கு ஜம்பூத்வீபம் என்று பெயர். நாம் வாழும் இந்த பூமியைப் போன்று இன்னும் ஆறு த்வீபங்கள் உள்ளது. ஜம்பூ என்றால் நீர் என்று அர்த்தம். இது லக்ஷம் யோஜனை விஸ்தீர்ணம் உள்ளது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும் இந்த ஜம்பூத்வீபத்தினை ஒன்பது பாகமாய் பிரித்து இமயமலைக்கும் தெற்கேயுள்ள சமுத்திரத்திற்கும் நடுவேயுள்ள ஒன்பதினாயிரம் யோஜனைத் தூரமுள்ள பிரதேசத்தினை பாரத வர்ஷம் என்று திருநாமமிட்டு, இது மட்டுமே கர்மபூமி என்று நிர்த்தாரணம் செய்கின்றது சாஸ்திரங்கள். இந்த ஒரு பகுதியில் மட்டுமே நல்ல கர்மாக்களைச் செய்து எல்லா உயர்ந்த பலன்களையும் அடையமுடியும்.
மீதமுள்ள எட்டு பாகங்களிலும், ஆறு த்வீபங்களிலும் இந்த அளவு பலன்களை அடையமுடியாது.
இந்த ஒன்பதனாயிரம் யோஜனைத் தூரத்திலும் ஒன்பதில் ஒரு பங்கான நமது இந்தியாதான் பரதகண்டமாகும். இதுவே ஆன்மீகத்தில் பிரதானமாக விளங்கக்கூடிய பிரதேசமாகும். உலகம் முழுதும் போற்றக்கூடிய மஹான்களை
உருவாக்கியதும், உருவாக்கிக் கொண்டிருப்பதும், உருவாக்கப் போவதும் இந்த பரத கண்டம் மட்டுமே! பூமியில் உள்ள பாகங்களின் பிரிவு காடுகளாலும், மலைத் தொடர்களினாலும், நதிகளாலும், ஸமுத்திரங்களினாலும் ஏற்படுகின்றது. இந்த பரத கண்டத்தில் மட்டுமே எண்ணற்ற புண்ய நதிகளும், புண்ய மலைகளும், புண்ய காடுகளும் உள்ளது. அதற்குக் காரணம் இங்கு மட்டுமே நல்லத் தவத்திற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகின்றது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கடுமையான தவம் செய்த முனிவர்கள் பலர். அவர்கள் தவத்திற்கு மெச்சி அவர்களுக்காகவே கோயில் கொண்ட பெருமாள்கள்! கோயில் கொண்டதால் தெய்வீகமானது அங்காங்குள்ள சூழ்நிலை!

விரசித நவ பாகா ரத்நபேதைர் விசித்ரை
விவித விததரேகா வ்யக்த ஸீமா விபாகா !
ஹரி சரண சரோஜம் ப்ரேப்ஸதாம் அர்ச்சநீயம்
ப்ரதயஸி நவநாபம் மண்டலம் பாதுகே! த்வம் !! !887!

ஹரி : பெருமாளுடைய – சரணசரோஜம் : தாமரைப்போன்ற திருவடிகளை – ப்ரேப்ஸதாம் : அடையவேண்டுமென்று ஆசையுள்ளவர்கள் – அர்ச்சநீயம் : புஜிக்கத் தக்கதான – நவநாபம் : ஒன்பது பாகங்களையுடையதாயும், நாபி என்னும் சக்ரவர்த்தியினுடைய ஸந்ததிகளையுடையதாயும் இருக்கின்ற – மண்டலம் : பாரத வர்ஷத்தை – ப்ரதயஸி ப்ரஸித்தமாக்குகின்றாய்

ஹே! பாதுகே! ஒன்பது விதமான ரத்னங்களால் இழைக்கப்பட்டு நடுவே தீர்க்கமான பல கோடுகளால் வெவ்வேறு பிரிவுகள் உள்ளவளாயும், பெருமாள் திருவடிகளையே அடைய விரும்பும் ஆச்சார்யர்கள் ஸேவிக்கப்படவேண்டியவளாயுமிருக்கின்ற நீ,
நாபி என்ற சக்ரவர்த்தியின் வாரிசுகளால் ஒன்பது ஒன்பது பிரிவினைகளாக்கித் தனித்தனியே ஏற்படுத்தப்பட்ட பூபாகங்களையுடையதும், சாஸ்திரங்களால் இது ஒன்றேதான் கர்மபூமி என்று அறுதியிடப்பட்டு, தபஸ் முதலான கர்மாக்களைச் செய்வதற்கும், பெருமாளை ஆராதிப்பதற்கு வேண்டிய சௌகர்யங்களை உடையதுமாயிருக்கின்ற, ஸத்கர்மங்களைச் செய்து நல்ல கதியினை அடைய விரும்புவர்கள் வஸிக்க விரும்பும் பாரத வர்ஷத்தினைப் போலிருக்கின்றாய்!

March 26, 2009

Pesum Arangam-55

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:24 pm

ரகுபதிபதஸங்காத் ராஜ்யகேதம் தயஜந்தீ
புநரபி பவதீ ஸ்வாந் தர்சயந்தீ விஹாராந் !
அபிஸமதித வ்ருத்திம் ஹர்ஷகோலாஹலாநாம்
ஜநபத ஜநிதாநாம் ஜ்யாயஸா சிஞ்ஜிதேந !!883!!

ரகுபதி : ஸ்ரீராமனுடைய – பத : திருவடிகளில் – ஸங்காத் : சேர்ந்த்தால்
ராஜ்யகேதம் : ராஜ்ய பாரத்தினால் உண்டான கஷ்டத்தை – தயஜந்தீ : விட்டவாளாயும். – ஹர்ஷ : ஸந்தோஷமான – கோலாஹலாநாம் : கூச்சல், கொண்டாட்டம்.

பாதுகையானது பதினான்கு வருடங்கள் பொறுமையாக ஓரிடத்தில் நிலைத்து நின்று தூயஅரசாட்சி நடத்தியது. இந்த ராஜ்ய பாரத்தினை சுமப்பது என்பது இலகுவான காரியமில்லை! மிக மிக கடுமையான ஒரு சுமை! இராமன் வனவாசத்திலிருந்து அயோத்திக்குத் திரும்புகின்றான். இராமன் வந்து பாதுகைகளை அணிந்தவுடனே பாதுகை, இத்தனை நாள் ராஜ்யபாரத்தினால் உண்டான கஷ்டங்களை அறவே மறந்து, தனக்கு சொந்தமாயுள்ள பெருமாள் திருவடிகளோடு மகிழ்வுடனே சேர்ந்துபெருமாள் திரும்பிவந்து விட்டதாலுண்டான சந்தோஷத்தில் கூச்சலிட்டதாம்.

பெருமாள் கிருஷ்ணனாய் அவதரிக்கின்றார். துஷ்ட நிக்ரஹம், சிஷ்ட பரிபாலனம், தர்மத்தினை நிலைநாட்டுகின்றார். பின்னால் வரப்போகும் சந்ததியினர்காக ‘கீதை” என்னும் ஒரு பெரிய பொக்கிஷத்தினை அளித்து பக்தி, பிரபத்திகள் எனும் மோக்ஷ உபாயங்களை அறிவிக்கின்றார். இராமனைப் போலன்றி அதி சீக்கிரமாக தன்னடி சோதிக்கு எழுந்தருளுகின்றார். கலி பிறக்கின்றது. நல்வழி காட்டுபவர்கள் யாரும் இல்லையெனில் இந்த கலி இன்னும் கடுமையாகுமே! லோகத்தார்களை ரக்ஷிக்க வேண்டுமே..? தன் திருவடியாழ்வாராகிய பாதுகையினை நம்மாழ்வாராய் இந்த கலியில் அவதரிக்கச் செய்தான்.
பெருமாளுடைய பிரிவினைப் பொறுத்துகொண்டு பாதுகையாய் அப்போது அரசாண்ட அந்த பாதுகை இப்போது நம்மாழ்வாராய் அவரைப் பிரிந்து அவதரிக்கின்றது. கலியில் பெருமாளை இழந்து உண்மைப் பொருளை அறியாமல் உலகம் கெட்டு போயிருப்பதையும், இந்த கலியில் பக்தி மார்க்கத்தினை அனுஷ்டிப்பது கடினம் என்பதனையும் உணர்ந்து – சுலபமானதும், சீக்கிரத்தில் பலனைத் தருவதானதும், எல்லோரும் அனுஷ்டிக்க்க் கூடியதும், எல்லா மார்க்கத்தினைக் காட்டிலும் உயர்ந்த்தானுமான “சரணாகதி“ ஒன்றுதான் மோக்ஷத்திற்கு உபாயம் என்றும், இந்த உபாயத்தினால் பெருமாளை அடைவதே சிறந்த்து என்றும், ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந் நாராயணனே பரத்வம் – இந்த உலகு அவரது உடம்பு – அவருடைய விளையாட்டுதான் இந்த உலகத்தினை சிருஷ்டித்தல். காத்தல், அழித்தல் – மோக்ஷம் என்பதனை அவர் ஒருவரைத் தவிர மற்ற எவராலும் அளிக்க இயலாது – அவரை எல்லோரும் ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் என்று உண்மையை, வேதமனைத்தையும் தமிழில் பாசுரமாக உலகுக்கு உணர்த்தி, எல்லோரையும் வைணரவாக்கி உலகினை ரக்ஷணம் செய்தார்.
பெருமாளுடைய பிரிவாற்றாமை ஆழ்வாரை மிகவே பாதித்த்து. அர்ச்சை ரூபத்திலாவது இப்பூவுலகில் தனக்கு ஸேவை சாதிக்கவேணும் என்று வேண்டி நிற்க, ஆர்த்தியோடு அனைவரையும் அழைக்க, அனைத்து திவ்யதேச பெருமாள்களும் ஆழ்வார் இருக்குமிடம் வந்து தரிசனம் கொடுக்க.
ஆழ்வார், பெருமாளின் பிரிவினால் உண்டான கஷ்டம் மறந்து, சந்தோஷம் மிகுந்து, அந்த அனுபவங்களைனைத்தையும் பாசுரங்களாய் பாடி சந்தோஷ கூச்சலிட்டு மெய்மறந்திருந்தார். ஆழ்வாருடைய உபதேசங்களினால் ஜனங்களும் அர்ச்சாவதாரத்தின் உண்மைகளையும் பெருமைகளையும் அறிந்து, பல்லாண்டு பாடி ஆடி ஆனந்தித்துயிருந்தனர்.

March 25, 2009

Pesum Arangam-54

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 7:22 am

Chapter-54
25.03.2009
 
ஸாதயந்தி மதுவைரி பாதுகே
ஸாதவ: ஸ்திரமுபாய மந்திமம் !
த்வத்ப்ரவ்ருத்தி விநிவர்த்தநோசித
ஸ்வப்ரவ்ருத்தி விநிவர்த்தநாந்விதம் !!879!!
 
ஸாதவ: பெரியோர்கள் – அந்திமம்: கடைசியான – உபாயம்: சரணாகதிரூபமான மோக்ஷோபாயத்தை – ஸாதயந்தி: அனுஷ்டிக்கிறார்கள்.
 
பக்தி என்பது பெருமாளின் திருவடிகளை அடைவதற்கான ஒரு உபாயம்.   வேறு எதையும் நினைக்காமல், எல்லையில்லாத ப்ரீதியோடு அவன் ஒருவனையே தியானம் செய்து அவன் தாள்கள் அடைவது.  இது பலன் தர பல ஜன்மங்கள் கூட ஆகலாம்.
 
இந்த ருசி, ஞானம் இல்லாதவர்களுக்கும், காலதாமதத்தினைப் பொறுக்காதவர்களுக்கும் நமது ஆழ்வார், ஆச்சார்யர்கள் காட்டி கொடுத்திருக்கும் உபாயம் சரணாகதி!
 
ஹரி!  மோக்ஷத்திற்கு உபாயமாக உள்ள பக்தியை அனுஷ்டிப்பதற்குத் தேவையான பக்தியோ, ஞானமோ, சக்தியோ, காலதாமதத்தினைப் பொறுக்கின்ற பொறுமையோ என்னிடத்தில் இல்லை!  நான் எதற்கும் உபயோகமற்றவன்! எனக்கு உன்னைத் தவிர வேறு கதியில்லை!
 
அஹிஞ்சனோ..! அநந்ய கதி சரண்ய: !!
த்வத் பாத மூலம் சரணம் சரணம் ப்ரபத்யே !!
 
நீரே என்பேரில் தயை பண்ணி, பக்தி என்னும் உபாயத்தினைக் கடைப்பிடிக்க இயலாத எனக்கு, மோக்ஷத்தினை அருள வேண்டும் என்று மனமுருக கெஞ்சி கேட்க வேண்டும்! 
 
விரும்பி நின்றேந்த மாட்டேன் விதியிலேன் மதியொன்றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை உருகும் வண்ணம்
கரும்புமர் சோலை சூழ்ந்த அரங்கமாகோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே – தொண்டரடிப்பொடிகள்-
 
உன்னை வாயார துதிக்க வேண்டுமன்றோ..? அதைச் செய்யாது இருந்தேன்!  உன் சிறப்பை அறியாதது மட்டுமல்ல, உன்னைத் தவிர மற்ற எல்லா பொருளையும் அறிந்து கொண்ட நான்,
 நீ ஒருவன் உண்டு என்ற அறிவு கூட இல்லாமலிருந்தேனே!
மனோ, வாக், காயம் ஆகிய முக்கரணங்களாலும் உனக்கு ஏதும் செய்யமாலிருந்தேனே!
இரும்பையாவது நெருப்பினால் உருக்கி விடலாம்.  இரும்பினைவிட மோசமான இந்த வலிய நெஞ்சத்தினை  கரும்புச்சோலை மிகுந்த அரங்கநகரில் கோயில் கொண்ட  அரங்கன் சிறிது சிறிதாக உருகச் செய்தான்..!
 
 
ஆச்சார்யனைக் கொண்டு சரணாகதி செய்வித்து அடைய வேண்டும் !  அவர்கள் நமக்காக பெருமாளிடத்து இறைஞ்சி நாம் கேட்ட பலனை சாதித்துக் கொடுப்பார்கள்.
 
பக்திக்கும், சரணாகதிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு பக்தி மார்க்கத்தில் இறங்குகிறவர்கள் விஷயத்தில் ஆச்சார்யனுடைய ப்ரயத்தனமில்லை.  அவர்கள் பக்தியோகம் பண்ணும் விதத்தினை வேண்டுமானால் சொல்லிக் கொடுத்து விட்டு ஒதுங்கிவிடுவார்கள். 
 
சரணாகதியினை பொறுத்தவரை ஆச்சார்யன் தம்முடைய நற்குணங்களாலும், உபதேசங்களாலும், அநுஷ்டானங்களாலும், சிக்ஷைகளாலும் ஸம்ஸாரத்தில் மூழ்கி காமம், குரோதம் முதலானவைகளால் ஆன கொடிய மனதுள்ள ஜனங்களை ஸ்வாதீனப்படுத்தி, அவர்களுடைய மனதை சீர்திருத்தி, அவர்களுடைய மனதில் பெருமாளை சஞ்சரிக்கும்படி செய்கிறார்கள்.
 
சரணாகதி அடைந்தவனுக்கு சாதித்து கொடுத்து விட்டு ஆச்சார்யன் ஆத்ம திருப்தியடைவான்.!

March 24, 2009

Pesum Arangam-53

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 9:48 am

 
Chapter-53
24.03.2009
 
இராமன் கானகம் சென்றபின் பாரதம் களையிழந்தது.   பரதனின் முயற்சியினால்  இராமனுக்குப் பதில் இராமனது பாதுகை அரசாண்டது.   பாரதம் இருட்டினின்று மீண்டு ஒளிர்ந்தது.
 
வைணவம் ஆழ்வார்களின் காலத்திற்கு பின்பு களையிழைந்தது.  காலவெள்ளத்தில் ஆழ்வார்களின் பாசுரங்கள் கரைந்து மறைந்தன.  நாதமுனிகள் என்னும் ஒரு மஹாயோகி நம்மாழ்வாரையும் அவருடைய திவ்ய சூக்திகளையும் ஸாக்ஷாத்தரித்து ஜீர்ணம் ஆகியிருந்த நம் வைணவ சம்ப்ரதாயத்தினை ஜீர்ண உத்தாரணம் செய்து ஒளிரச் செய்தார்.
 
கருடாழ்வார் வேத சொரூபம்.  நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் ஆவார்.  நம்மாழ்வாரும் கருடாழ்வாரும் ஒன்றுதான்.
 
ஸ்வாமி தேசிகர் பாதுகா ஸஹஸ்ரம் பாடும் போது, தம்முடைய தியானத்தில் நம்பெருமாள் புறப்பாட்டினை ஸேவிக்கின்றார்.

பாதுகைகளிலிருந்து வெளிப்படும் பாகையினுடைய காந்தியானது கருடனைப் போன்று ஸ்வர்ண சாயலுடன் தங்கச்சிறகு விரித்தாற் போன்றும் அதில் கருடாரூடனாய் நம்பெருமாளையும் ஸேவிக்கின்றார்.
 
பத்ரளா மணிகணைர் ஹிரண்யமயீ
பாஸி ரங்கபதி ரத்ந பாதுகே !
கேளி மண்டப கதாகதோசிதா
பூமிகேவ கருடேந கல்பிதா !!
 
மணிகணைர்: ரத்னக் கூட்டங்களாலே – பத்ரளா: சிறகுகளை உடைத்தானவாளாய் – ஹிரண்மயீ: தங்கமயமாய் – கதாகத: போய்வருவதற்கு – உசித: தகுந்ததாய் – கருடேந: கருடனாலே – கல்பிதா: ஏற்படுத்தப்பட்டிருக்கிற – பூமிகேவ: வேஷம் போலே – பாஸி: பிரகாசிக்கின்றாய்
 
கருடன் வேதசொரூபம்.  இந்த கருடன் மீது பெருமாள் எழுந்தருளியிருப்பதன் மூலம் இந்த வேதங்களின் தலைவன் தாம்தான் என்பதனை உணர்த்துகின்றான். 
 
இதனை உறுதிபட உணர்த்தியவர் ஸ்வாமி நம்மாழ்வார் ஆவார். 
 
அவருடைய திவ்யசூக்திகள் பெருமாள்தான் வேதம் உணர்த்தும் பரத்வம் என்று நிர்ணயித்தது.  அவரை ஆராதிப்பதேதான் உபாயமென்றும், அவரை அடைவதேதான் உயர்ந்த புருஷார்த்தம் ஆகும் என்றும்,  அனைத்துலகும் அவரது உருவமேயென்றும்,  வேதம் கூறும் எல்லா கர்மங்களும் அவரை குறித்த ஆராதனமேயென்றும், எல்லாப் பலன்களையும் அந்தந்த தேவதைகளின் உருவத்தில் இருந்து கொண்டு அவரேதான் கொடுக்கின்றார் என்று வேதங்களின் சூக்குமத்தினை வெளிப்படையாக்கி பெருமாளின் கல்யாண குணங்களையும் போற்றி தமிழ் பாமாலையாய் தொடுத்தவர் இந்த தமிழ்வேதமூர்த்தியாகிய நம்மாழ்வார் ஆவார்!   எனவேதான் நம்மாழ்வாரின் மற்றொரு அவதாரமாகிய பாதுகை கருடனாய் விசேஷமாக ஸேவை சாதித்தருளுகின்றது. 
 
ஆழ்வார்களின் பாசுரங்களை ஸேவிப்பதனால் கருடாரூடனான நம்பெருமாளுக்கும், அவனை சேவிக்கும் பக்தனுக்கும்  ஆனந்தத்தினை உண்டாக்கும். 
 
கருடன் போன்று விளங்கும் பாதுகை,  நம்மாழ்வார் இருக்குமிடம் தேடி ஸேவைக் கொடுத்த பெருமாள் போல,  அந்த பரமபாகவதனிடத்தில் பெருமாளைக் கொண்டு வந்துவிடும்.

subjectRe: Today’s Post ( 24.03.2009)
mailed-bygmail.com

swami,
romba nanna irukku…enakku romba naala irundha doubt clear
aayiduththu…ella kovililum 3rd day illa 5th day dhaan garuda sevai
irukkum bramothsavaththil..srgm thla mattum 4th day en nu romba naal a doubt…4th day dhaan, adhyaapaka thirumazhisai aazhwaarudaya naanmugan thiruvandhaadhi paaduva..adhu full a vedha thathvangal vaiththu perumaaludaya para swaroopaththai nirnayam pannuvaar..adha sevikkum pOdhu, vedha mayamaana garudan, namperumalaai thookki uyara kATTi, ivar dhaan vedha purushan nu kAttradhu maari irukku…
adiyen…
 
Madhusudhanan Kalaichelvan
 madhuraamanujam@gmail.com 

March 21, 2009

Pesum Arangam-52

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 9:19 pm

Chapter-52
19.03.2009
 
நல்ல ஆச்சார்யபுருஷன் ஒருவர் இருக்குமிடம் மற்றும் அவர் தங்குமிடத்தினைச் சுற்றிலுமுள்ள மொத்த தோஷமும் அழிந்து போகும். அங்கு எந்தவித தீங்கும் நேராதபடி அவர்களது தெய்வீகம் பாதுகாக்கும்.  அவர்கள் அந்தவிடத்தினை விட்டு அகன்ற பின்பும் அந்தவிடம் பொலிந்து விளங்கும்.  அவர்கள் காலடி பட்ட இடம் துலங்கும்.
 
ஒருவரின் கிரஹத்திற்கு ஒரு ஆச்சார்ய புருஷர் எழுந்தருளுகின்றார் என்றால் அவரது சீடர்களான பரம ஸ்ரீவைஷ்ணவர்களின் பொன்னடிகளும் அந்த கிரஹத்தில் பதியும்.  இந்த அதிர்வுகள் அந்த இல்லத்திற்கு பல நன்மைகளைச் செய்யும்.
 
பாதுகைக்கு பட்டாபிஷேகம் ஆன பின்பு பாதுகையின் அரசாட்சிக்குட்பட்ட பாரதம் முழுதும் எவ்வித குறைகளுமின்றி மக்கள் சந்தோஷித்து இருந்தனர்.
 
சுபப்ரணாதா பவதீ ச்ருதீநாம்
கண்டேஷூ வைகுண்ட பதிம் வராணாம்
பத்நாஸி நுர்நம் மணிபாத ரக்ஷே
மங்கள்யசூத்ரம் மணிரச்மிஜாலை: !!869!!
 
மங்கள்யசூத்ரம்: தாலிக்கயிற்றினை – கண்டேஷூ: கழுத்தில் – பத்நாஸி: கட்டுகிறாய். – வைகுண்டபதிம் வராணாம்: பெருமாளையே பர்த்தாகவாக வரிக்கும் –
 
வேதங்களாகிய வேதமாதா பெருமாளையே தன்னுடைய கணவனாக பாவிக்கின்றாள்.  பாதுகைகள் கல்யாணத்தினை நடத்தி வைக்கும் புரோகிதர் போன்று சுபமான மந்திரங்கள் ஓதி தாலிசரட்டினை பெருமாள் கையில் கொடுத்து வேதமாதாவினை பெருமாளுக்குத் திருக்கல்யாணம் செய்து வைக்கின்றது.
 
ஆழ்வார்கள் அவதரிக்கும் முன்பு வேதங்கள் பற்றியும் அது குறித்த பரம்பொருளைப் பற்றியும் பலவிதமான அபிப்ராயங்கள் நிலவி வந்தது.  ஸ்ரீநம்மாழ்வார் போன்ற ஆழ்வார் ஆச்சார்யர்கள் அவதரித்த பின்பு பெருமாள் ஒருவரையே வேதங்கள் தனக்கு யஜமானராக கொண்டாடுகின்றது என்பதனை தங்களுடைய திவ்யமான பாசுரங்களினால் நிர்த்தாரணம் செய்து பெருமாளுக்கும் அந்த வேதப் பெண்களுக்கும் ஸம்பந்தத்தை நிலைநாட்டினார்கள்.
 
மஹாசுகம் என்பது பகவதனுபவம் மட்டுமே!  இந்த பகவதனுபவத்தினைத் தவிர வேறென்றும் அறியாதவர் நம்மாழ்வார்.

அவரது பாசுரங்கள் அனைத்தும் சுகமான அக்ஷரங்களும் அழகான ஸப்தங்களும் கலந்த திவ்யமான பாசுரங்கள்.
நாம் எல்லோரும் நித்யமும் நம்முடைய ஸிரஸ்ஸில் தாங்கி கொண்டாட வேண்டியவை.  பாதுகைகளையும் (நம்மாழ்வாரே பாதுகையாயும் இருப்பதால்) நித்யமும் நாம் ஸிரஸ்ஸில் தாங்கி சிலாகிக்க வேண்டும்.
 
ஸ்திரா ஸ்வபாவாந் மணிபாதுகே! த்வம்
ஸர்வம்ஸஹா ஸவாதுபலப்ரஸூதி: !
ப்ருத்வீவ பத்ப்யாம் பரமஸ்ய பும்ஸ:
ஸம்ஸ்ருஜ்யஸே தேவி! விபஜ்யஸே ச !! 871 !!
 
ஸ்திராஸ்வபாந்: உறுதியான ஸ்வபாவம் – ஸர்வம்ஸஹா: தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய குற்றம் பொறுத்து, அவர்கள் பாரத்தினை தாங்குதல் –  ப்ருத்வீவ: பூமித்தாயாரைப் போன்று
 
இந்த பாதுகைகள் தங்களுடைய உறுதியான ஸ்வபாவத்தினால் தன்னை அண்டியவர்களின் குற்றங்களை ஸஹித்துக் கொண்டும்,
பூமிதேவிக்குண்டான பொறுமை, தயை போன்ற குணங்களோடு விளங்குகின்றது.
 
நாம் எந்த சூழ்நிலையில் வசிக்கின்றோமோ அந்த சூழ்நிலைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவோம்.  அதனால்தான் நம் பூர்வர்கள் அனைவரும் திவ்யதேச வாஸத்தினை பெரிதும் நாடினர்.  பாதுகைகள் நம்பெருமாளின் திருவடிகளை விட்டு அகலாது சதா பூமிதேவி ஸ்ரீதேவி அருகில் வாஸம் செய்வதால் அவர்களுடைய கல்யாண குணங்களை தாமும் அமைய பெற்றது.
 
இம்மூவரின் குணநலனும் சேர்ந்து அமையப்பெற்ற பாதுகையினை ஸிரஸ்ஸில் தாங்கப்பெற்ற நாம் அனைவரும் பரம பாக்கியசாலிகள்!

 

March 18, 2009

Pesum Arangam-51

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:43 pm

Chapter-51
18.03.2009
 
பாதுகையிலுள்ள ரத்னங்களிலிருந்து வெளிப்படும் காந்தியானது பூமியின் மேல் பரவி எங்கும் தேஜோமயமாய் காட்சியளிக்கின்றது.  தன்னைத் தாங்கும் பூமிதேவிக்கு,  பாதுகைகள் பகுமானமாய்,  இந்த உயர்ந்ததொரு பட்டாடையினை மேலே போர்த்தினாற் போன்று விளங்குகின்றன இந்த காந்திகள்.
 
சிறந்த ஆச்சார்யபுருஷர்கள் உண்மையிலேயே பக்தி சிரத்தையுடைய சீடர்களை எளிதில் அறிவார்கள்.  அந்த சீடர்களிடத்து தம்முடைய புத்தியினாலும், அனுபவத்தினாலும் தாம் அடைந்த ஆன்மீக ஞானத்தினை ஊட்டி,  பூமிதேவியின் மேல் பரவி நிற்கும் ரத்ன காந்தியினைப் போன்று,  தம்மைப் போலவே அவர்களையும் உருவாக்குகின்றார்கள்.
 
பாதுகையின் ரத்னங்களிலிருந்து வெளிப்படுகின்ற ஒளிக்கற்றைகளில் சில சூரியன் போன்று பிரகாசிக்கின்றன.  சில அக்னி போன்று தகதகக்கின்றன. சில கிரணங்கள் சந்திரனைப் போன்று குளிர்ச்சியாய் விளங்குகின்றன.   சூரியன், அக்னி, சந்திரன் போன்று விளங்கும் ஒளிக்கற்றைகள் ஒன்றாக கலந்து நம்முடைய அஞ்ஞானமாகிய இருட்டைப் போக்கடிக்கின்றன.
 
சிறந்த ஆச்சார்ய புருஷர்கள் பற்பல சாஸ்திரஞானம் பெற்றவர்களானபடியினால் சூரியனைப் போன்று பிரகாசமுள்ளவராயும்,  நல்லதொரு ஆச்சாரத்தினைக் கடைபிடித்து அக்னி போன்றும்,  தன்னை ஆஸ்ரயித்தவர்களை சந்திரன் போன்று குளிர்ப்பித்தும்,
அவர்களுடைய அஞ்ஞானமாகின்ற இருட்டினைப் போக்கடிக்கின்றனர்.
 
ரங்கேஸ்வரஸ்ய புரதோ மணிபாதுகே! த்வம்
ரத்நாம்சுபிர் விகிரஸி ஸ்புடபக்திபந்தா !
பாதௌ விஹாரயிதும் அத்புத ஸௌகுமார்யௌ
ப்ராய: ஸரோஜ குமுதோத்பலபத்ர பங்க்திம் !!
 
ரங்கேஸ்வரஸ்ய: ரங்கநாதனுடைய – அத்புத: ஆச்சர்யமான – பாதௌ: திருவடிகள் – ஸௌகுமார்யௌ: சௌகர்யமாக (நோகாமல்) – விஹாரயிதும்: நடத்துவதற்காக – ஸரோஜ: தாமரைப்பூ – குமுத: ஆம்பல் பூ – உத்பல: கருநெய்தல் பூ – ப்ராய: விகிரஸி:  பரப்புகின்றாய்.
 
நம்பெருமாள் திருவீதி எழுந்தருளுகின்றார்.  நம்பெருமாளின் திருவடிகளின் முன்பு தாமரை, ஆம்பல், கருநெய்தல் முதலான பூக்கள் சொரியப்பட்டு திருவடிகளானது ஸேவை சாதிக்கின்றது.  நம்பெருமாளின் திருவடிகள் உறுத்தாமலிருப்பதற்காக, நம்பெருமாளின் திருவடிகளைக் காக்கும் பாதுகையானது இவற்றை திருவடிகளில் சொரிந்து பயபக்தியோடு விளங்குகின்றது.
 
நம்முடைய ஹிருதயமானது கல்லைக்காட்டிலும் கடினமாகயுள்ளது.  இந்த ஹிருதயத்தில் பெருமாள் எழுந்தருளவேண்டுமானால், மிருதுவான புஷ்பங்கள் போலிருக்கின்ற திவ்யசூக்திகளை நம் மனம் உணரவேண்டும்.  இந்த உணர்தலை ஆச்சார்யன் மட்டுமே உண்டாக்க முடியும்.  ஆச்சார்யனின் கிருபையினால் இந்த ஸ்ரீசூக்திகளின் கருத்தினை நம் மனம் அறிந்தால் அது நம்பெருமாள் நடமாடும் இராஜபாட்டையாகி விடும்.

 
  

Pesum Arangam-50

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:37 pm

 
Chapter-50
13.03.2009
 
மண்டோதரி கற்பின் இலக்கணம்.  இந்த கற்புக்கரசியின் கணவனான இராவணனை வீழ்த்துதல் என்பது எளிதன்று.  ஏனெனில் கற்புடைய பெண்களின் மாங்கல்யம் பலம் வாய்ந்தது.  அவர்களது சாபம் எதிராளியின் மிகப்பெரிய பாபம். 
 
ரகுவம்சத்திற்கு சூர்யவம்சம் என்று பெயர்.  அந்த வம்சத்தின் முதல் புருஷன் சூரியன் ஆவான்.  இந்த பிரகாசமான சூர்யகுல வம்சத்தவர்கள் அமர்ந்து கோலோச்சிய சிம்ஹாஸனத்தில் ஸ்ரீராமபாதுகையும் அமர்ந்தது.   சூரியனுடைய காந்தியும்,  பாதுகையினுடைய காந்தியும் இணைந்தது.
இராவணன் மாண்டான்.  மண்டோதரியும் வீழ்ந்தாள்.  எதையும் வெல்லும், சத்தியம் தவறாத இராம இராஜ்ஜியம் தோன்றியது.
 
சூரியசக்தியும், பாதுகைசக்தியும் ஒன்றாக இணைந்ததைப் போன்று, ஆழ்வார் ஆச்சார்யன் உபதேசங்களும், அனுக்ரஹமும், நம்மிடம் உள்ள காமம், கோபம், லோபம், கர்வம், பொறாமை முதலான கெட்டகுணங்களை அடியோடு போக்கும். சாத்வீகம் பெருகும்.
 
 
ரங்காதி ராஜபதபங்கஜ மாச்ரயந்தீ
ஹைமீ ஸ்வயம்பரிசுதா ஹரிநீலரத்நை:
ஸம்பாவ்யஸே ஸூக்ருதிபி: மணிபாதுகே! த்வம்
ஸாமாந்ய மூர்த்திரிவ ஸிந்து ஸூதா தரண்யோ: !!! 853 !!
ஸிந்துசுதா: ஸமுத்திரராஜனின் பெண் (மஹாலக்ஷ்மி) தரண்யா: பூதேவி (இந்த இரண்டு பெயர்களும் நல்லாயிருக்கே!) – ஹைமீ: தங்கமயமாய் – ஹரிநீலரத்நை: இந்திர நீலக்கல்
 
பாதுகை தங்கமயமாயுள்ளது.  அதில் பதிக்கப்பெற்றுள்ள இந்திரநீலக்கல் கருநீலமாய் உள்ளது. மஹாலக்ஷ்மீ நல்ல சிவந்த நிறம் உடையவள்.  பூதேவி – கருப்பு நிறம்.  இந்த இரண்டு லக்ஷ்மியும் கலந்த ஒரு அம்சமாய், இவர்களினும் மேம்பட்டு பாதுகாதேவி விளங்குகின்றாள்.
 
ஆழ்வார் பெருமாளை ஒரு புருஷனைப் போன்றும், பெருமாள் ஆழ்வாரை ஒரு உயர்ந்த ஸ்த்ரீயைப் போலவும் அனுபவிக்கின்றார்கள். திவ்யதம்பதிகளான நம்பெருமாள்-தாயார் உறவு மிக மிக உயர்ந்தது.  ஆனால் அதைக் காட்டிலும் உயர்ந்தது பெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் உள்ள உறவானது!.
 
இந்த ஆழ்வார் நம்பெருமாளின் அன்யோந்யத்தினை ஸ்ரீரங்கத்தில் ஆழ்வார் மோட்சத்தன்று நாம் கண்கூடாக காணலாம்.   நம்பெருமாள் தன்னிடமுள்ள ஸர்வத்தையும் ஆழ்வாருக்கு ஈந்து மேற்கொண்டு அனுக்ரஹிப்பதற்கு ஏதுமின்றி  ஆழ்வாருக்கும் மோக்ஷம் கொடுத்தனுப்பி, தனியே திருமுகம் வாட்டமுற்று காணப்படுவார்.   நம்பெருமாளும் மணிமண்டபத்தினை விட்டு வாட்டமுடனே ஆஸ்தானம் எழுந்தருளியபின், நாம் ஆயிரங்கால் மண்டபத்திற்கு செல்வோமாயின் அங்குள்ள ஒவ்வொரு தூணும் அழுவதை நாம் உணரலாம்.    ஆனால் பங்குனி உத்திரத்தன்று தாயாரை விட்டு பிரியும் போது அந்த பங்குனி உத்திர மண்டபத்தில் நமக்கு இந்த உணர்வு ஏற்படுவதில்லை!   அது பக்தனுக்கும் பகவானுக்குமுள்ள சம்பந்தம்!  இது பெருமாளுக்கும் பிராட்டிக்கும் உள்ள சம்பந்தம்!
 
பரமைகாந்திகளான இந்த ஆழ்வார் ஆச்சார்யர்கள் பெருமாளைத் தவிர வேறு எந்த தேவதையினையும் நினையாதவர்கள். பெருமாளின் நினைவைத் தவிர வேறு எந்த பிரயோஜனத்தினையும் எதிர்பாராதவர்கள்!
 
சூரியன் எப்போதும் வேதத்தோடு கூடியிருப்பது போன்று, பெருமாளும் உபநிஷத்துக்கள் போலிருக்கின்ற ஆழ்வார் முதலான ஆச்சார்யர்களோடுதான் எழுந்தருளியுள்ளான்.

March 13, 2009

Pesum Arangam-49

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:26 am

 
Chapter-49
12.03.2009
 
பாதுகையானது மிகவும் மிருதுவானது.  லேசானது.  இப்படியிருந்தால்தான் நம்பெருமாளின் சிவந்த  திருவடிகளும் நோகமாலிருக்கும்.  நம்பெருமாள் சஞ்சாரத்திற்குக் கிளம்பும் முன் பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்வித்து சந்தன குழம்பு சாற்றி நம்பெருமாளின் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றனர்.  பெருமாள் சஞ்சாரத்திற்கு எழுந்தருளுகின்றார்.  அந்த பாதுகையானது எனக்கு மோக்ஷத்தினையருள வேண்டும் என்கிறார் ஸ்வாமி தேசிகர்!
 
இங்கு இவர் நம்பெருமாளை நேரடியாக வேண்டாமல் பாதுகையினை மோக்ஷம் தர வேண்டி பிரார்த்திப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
ஆழ்வாராகிய பாதுகையின் மேலேறிக் கொண்டுதான் பெருமாள் எழுந்தருளுகின்றார்.  அதாவது ஆழ்வார் ஆச்சார்யன் இல்லாமல் பெருமாள் ஸேவை, கடாக்ஷம்  இல்லை! பெருமாளின் பெருமைகளை புரிந்து நடப்பதும், நினைப்பதும், அடைவதும்,  ஆச்சார்யன் மூலமாக மட்டுமே சாத்தியம்!  ஆச்சார்யன் அனுக்ரஹத்தினால் மட்டுமே மோக்ஷம்!

ஏற்கனவே நாம் சொல்லியிருந்தபடி ஆச்சார்யன் மட்டுமே நாம் சேர்த்து வைத்துள்ள பாபங்களை இல்லாமற் செய்யமுடியும்!  ஆச்சார்ய கடாக்ஷம் மட்டுமே புண்ணியமாகிய பொன்விலங்கினையும், பாபமாகிய இரும்பு விலங்கினையும், இந்த இரண்டு விலங்கினையும் நம்மிடமிருந்து உடைத்தெறிந்து மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்!

பெருமாள் இந்த ஜீவன்களை ரக்ஷணம் செய்வதே,
தயை, பொறுமை, விவேகம் முதலான நல்ல குணங்களையுடைய நல்ல ஆச்சார்யர்களைக் கொண்டுதான்!  இவர்களை கொண்டுதான் பெருமாள் உலகத்தினைக் காப்பாற்றுகின்றார்.  இவர்களைக் கொண்டுதான் ஜீவன்கள் கரையேறுகின்றன!  ஆச்சார்யன் மட்டும் இல்லாவிடின் இந்த இருவருக்குமே(பரமாத்மா, ஜீவாத்மா) திண்டாட்டம்தான்!
 
ஆழ்வார்கள் ஸர்வ வேதங்களின் சாரத்தினையும் தமிழ் பிரபந்தமாக அருளி, சரணாகதி என்கின்ற சுலபமான உபாயத்தினையும் நமக்குக் காட்டிக் கொடுத்துள்ளார்.  ஓன்றுமே தெரியாத நம்மையும் சுலபமாக மோக்ஷத்திற்கு வழிகாட்டுகின்றார்.  அத்தகைய ஆழ்வாரின் அவதாரமாகிய பாதுகைகளைதாம் நாம் மோக்ஷத்திற்கு உபாயமாக பற்ற வேண்டும். 
 
இத்தகைய பிரபந்தங்களின் அர்த்தங்கள் நமக்கு புரியும் போது மனமானது பிரகாசமடைகின்றது.    பாபங்கள் நடுங்கி ஓடுகின்றது. துக்கம் அகலுகின்றது.  துக்கம் அகலும் போது மெய்ஞானம் உயிர்த்தெழுந்து எங்கும் எதிலும் ஆனந்தம் என்ற நிலையுண்டாகின்றது.  இந்த ஆனந்த நிலை மோக்ஷத்திற்கு வழி காட்டுகின்றது.

March 12, 2009

Pesum Arangam-48

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 9:28 am

)
 
Chapter-48
10.03.2009
 
அந்யேஷூ ஸத்ஸ்வபி நரேந்த்ர ஸூதேஷூ தைவாத்
ப்ரஷ்ட: பதாத் அதிகரோதி பதம் பதார்ஹ: !
ப்ராயோ நிதாசயதி தத் ப்ரதமோ ரகூணாம்
கத்பாதயோ: ப்ரதிநிதீ மணிபாதுகே வா !! 824 !!
 
அந்யேஷூ: வேறான – நரேந்த்ரஸூதேஷூ: ராஜாவின் பிள்ளைகள் – ஸத்ஸ்வபி: இருந்தாலும் – தைவாத்: தெய்வ சங்கல்பத்தினால் – பதாத்: பட்டத்திலிருந்து ப்ரஷ்ட: நழுவினவனான பதார்ஹ: பட்டத்துக்குத் தகுந்தவன் பதம்: பட்டத்தினை அதிகரோதி: அடைகிறான்.
 
ஒருவனுக்கு ஒரு பதவி வருவதற்குத் தேவையான தகுதியும், வாய்ப்பும் இருந்து ஏதோ ஒரு காரணத்தினால் அந்த பதவியினை அவன் அடைய முடியாமல் போனாலும், அவன் இன்னொரு சமயம் அந்த பதவியினைக் கண்டிப்பாக அடைந்தே தீருவான். 
 
அவனுக்கு அது தவறிப் போன சமயத்திலும் அவன்கூட பதினாயிரம் பேர்கள் இருந்தாலும் யாருக்குத் தகுதியுள்ளதோ அவர்களே பட்டமேற்பார்கள். 
 
அயோத்தியில் இராமனுக்கு நடக்கவேண்டிய பட்டாபிஷேகம் நின்று போனது.  அவன் கூட பிறந்தவர்கள் யாரும் பதவியேற்கவில்லையே!  தகுதி வாய்ந்த ஸ்ரீராமபாதுகைகள்தானே பட்டம் ஏற்றது!
 
எவரொருவர் குற்றமில்லாது விளங்குகின்ற ஒரு உத்தம சீலரின் அறிவுரைப்படி நல்லவழியில் நன்னடத்தையோடு விளங்குகின்றாரோ
அவனிடத்து அனைத்துப் பெருமைகளும் நாடி வரும். 
 
ஸ்ரீராமன் தன் தந்தையிடத்து மிகுந்த மரியாதையும் பக்தியும் உடையவராயிருந்தார். வஸிஷ்டர் போன்ற சிறந்த ரிஷிகளின் வழிப்படி நடந்தார்.  இவரது திருவடிகளைப் பாதுகை ஆஸ்ரயித்தது.  பாதுகை பாரதத்தினையே ஆண்டது.
 
இந்த ராஜ்யபரிபாலனத்தினை இராமன் செய்யவேண்டும் என்று தசரதன் விரும்பினார்.  பரதன் ஆளவேண்டும் என்று கைகேயி விரும்பினாள்.  விருப்பு வெறுப்பின்றி இராமன் இருந்தார்.  இவர்கள் யாரும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.  யாருமே எதிர்பாராத ஸ்ரீராமபாதுகை அரசாண்டது.
 
தெய்வசங்கல்ப்பம் என்பது இதுதான்!. 
 
விரும்பினவர் வருந்தினர்!. 
 
எதிர்பாராதிருந்தவர் எதனையும் இழக்கவில்லை!.
 
இந்த பாதுகை பகவான் திருவடிகளில் சாற்றிக் கொள்ளும் போது சஞ்சரிக்கும்.  பெருமாளுக்கு சஞ்சாரத்தினைக் கொடுக்கும்.  ஒரு கட்டத்தில் ஒரேயிடத்தில் பதினான்கு வருடங்கள் இருந்து ராஜ்யபரிபாலனம் செய்தது. 
 
இதன் சக்தி இப்படித்தான் என்று அறுதியிடமுடியாது!.
 
பெருமாள் இல்லாததையும்(நாம் செய்யாத புண்ணிய பலனையும்) கொடுக்கலாம்!. 
 
இருப்பதையும்(நம்முடைய பாவங்கள்) இல்லாமல் செய்யலாம்!

Older Posts »

Blog at WordPress.com.