புவநமிதமசேஷம் பாதுகே! ரங்கநாத !
நிஜபதநிஹிதாயாம் தேவி! திஷ்டந் வ்ரஜந் வா
த்வயி நிஹித பரோபூத் கிம் புநஸ் ஸவாபம் ருச்சந் !!890!!
அசேஷம் : ஸமஸ்தமான – இதம் : இந்த – புவநம் : உலகத்தை – ஏக புத்ராதி : ஓரே பிள்ளையை பெற்றவனுடைய – மாநாத் :மனதைப் போன்று – பரிரக்ஷந் : காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற – ரங்கநாத : ரங்கநாதன் – நிஜபதிநிஹிதாயாம் : தன்னுடைய திருவடிஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ள –த்வயி : உன்னிடத்தில் – நிஹித: வைக்கப்பட்டிருக்கின்ற – பர: தன்னுடைய ராஜ்ய பாரத்தினை – அபூத்: ஆனார்.
ரங்கநாதன்தான் ஸமஸ்த லோக காரணன் – ரக்ஷிப்பதும் அவனே. இந்த உலகினை அவன் எப்படி ரக்ஷணம் செய்கின்றான் தெரியுமா..? ஒரேயொரு பிள்ளையைப் பெற்றவன் எப்படி தன் பிள்ளையை பாசமுடன் பேணி, கண்ணும் கருத்துமாய் வளர்ப்பானோ அப்படி கவனமுடன் ரக்ஷணம் செய்கின்றான்.
அவனுக்கும் ஓய்வு தேவைதானே..?
சற்றே இளைப்பாறுதல் வேண்டும்தானே..?
அப்போது தமக்கு நிகராக யார் இந்த பாரத்தினை தனக்கு நிகரான கவனமுடன் கையாளுவார்..?
தம்முடைய பாதுகைகள்தான் என்று ரங்கநாதனுக்கு புரிகின்றது..!
எனினும் பாதுகைகளின் மீது தான் ஏறி நின்று தன்னுடைய பாரத்தினைத் தாங்கும் உறுதி பாதுகைக்கு இருக்கின்றதா? என்று பரிக்ஷித்துப் பார்க்க விரும்புகின்றான்.
முதன் முதலாக தயங்கி தயங்கி கூச்சமுடனே தம் பாதங்களை குறுக்கிக் கொண்டு ஒரு வித வாஞ்சையோடு எழுந்தருளுகின்றான்…!.
நிறைவுறுகின்றான்..!.
அதன் பின்னரே இந்த லோகரக்ஷணார்த்தை பாதுகையிடம் அளிக்கின்றான் அவன்.
இதனை ஸ்வாமி தேசிகர், ‘நிஜபதநிஹிதாயாம் தேவி! த்வயி நிஹித பர:’ என்ற அற்புதமான பத்த்தினால் விசேஷமாய் அலங்கரிக்கின்றார் இந்த பாசுரத்தினை!.
இப்போது ஒரு விஷயம் நமக்குப் புரிகின்றது! இராமன் பாதுகையை இப்பாரதம் ஆள சற்றும் யோசிக்காமல் அனுப்பியது ஏற்கனவே அவன் பரிக்ஷைச் செய்து திருப்தியடைந்த்தால்தானோ…?
பாதுகை என்பது ஆச்சார்யன்தானே..!
ஒரு நல்ல ஆச்சார்யன் எப்படி உருவாகுகின்றார்..?
சாமான்யமாய் ஜனங்களுக்குக் கஷ்டம் தொடர்ந்து நேர்ந்தால் என்ன ஆகும்? ஒரு குறிப்பிட்ட காலம் வரை கடவுளே காப்பாற்று! காப்பாற்று! என்று வேண்டுவர்! சற்று காலம் கடுமையானால் கதறுவர்! – அந்த காலமும் கடந்து ஏதும் பலன் காணவில்லையென்றால் கடவுளை ஏசுவர்!. நாஸ்திக வாதம் பேசுவர். பெருமாளிடத்து துவேஷ புத்தியும் உண்டாகி இந்த ஸம்ஸார சுக துக்கத்தில் அழுந்தி வீழ்வர்.
நல்ல ஆச்சார்யனாய் உருவாகுபவர் என்ன கஷ்டம் ஏற்படினும் பெருமாளை மறக்க மாட்டார்கள். அவர்களது வைராக்கியமும், பெருமாள் மேலுள்ள பக்தியும் மேன்மேலும் வளரும். எப்படி உறுதியாய் வேரூன்றி நிற்கும் மரம் எத்தகைய சூறாவளிக் காற்றையும் தாங்கி நிற்கின்றதோ ஸம்ஸாரத்தில் ஒழிவு ஏற்பட்டு முன்னிலும் அதிக ஈடுபாட்டோடு அவன் தாள் பற்றுவர்.
பாதுகை மேல் ஏறி நின்று எப்படி பகவான் பரிசோதித்து பார்த்து தன்னுள் நிறைவு கொள்கின்றானோ அதுபோன்று ஒரு நல்ல ஆச்சார்யனையும் பெருமாள் பலவிதங்களில் பரிசோதிக்கின்றான்.
இவ்விதமான பரிக்ஷைகளில் தேறிய பின்பே நல்லதொரு ஆச்சார்யன் உருவாகுகின்றான்!
நம் பூர்வாச்சார்யர்களின் சரித்திரமே எடுத்துக் கொள்வோமே! எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கின்றனர்….!
கண்கள் பறி போனால் என்ன..!
தம் உயிரே போனால்தான் என்ன…. !
தாம் கொண்ட வைராக்கியத்தில் சற்றுகூட தளராது வாழ்ந்து காட்டினர்!
என்னதான் பெருமாள் சாஸ்திராத்தங்களை, மோக்ஷ உபாயங்களை நேரில் வெளியிட்டாலும், தனக்கு ஆத்மாவென்று கொண்டாடும்படியான ஞானிகளை ஆச்சார்யனாக ஆக்கி அவர்கள் மூலமே இந்த உலகை ரக்ஷித்து அருளுகின்றார்.
இவ்விதம் ஸர்வவிதத்திலும் பூர்ணமாக தேறி ஆச்சார்ய பதத்தினை வஹிக்கக்கூடியவர்கள் கிடைப்பது மஹா துர்லபமாகும்.
பிரும்மா தனக்கு பிரும்ம பட்டம் கிடைப்பதற்கே எத்தனையோ கோடியுகங்கள் தவமிருந்து பெறுகின்றான்….!
பிரும்ம பட்டம் பெறுவதற்கே இத்தனை பிரயத்தனப்படவேண்டியிருக்க, பெருமாளுக்கு ஸம்மான சதாச்சார்ய பட்டத்திற்கு, பெருமாளாகவே ஆவதற்கு எத்தனை சுகிருதம் பண்ணியிருக்கவேண்டும்..?
எவ்வளவு தவமிருக்க வேண்டும்…?
இத்தகையஆச்சார்யன் ஒருவனுக்குக் கிடைத்துவிட்டால் அவன் கடவுளையேத் தேட வேண்டாம்.!
ஆம்..! நம்மாழ்வாரை அடையப்பெற்ற மதுரகவிகள் அப்படித்தானே இருந்தார்..?
நம்பெருமாளே, ஆச்சார்யனைப் பெற்று சந்தோஷிக்க வேண்டுமென்று, நல்லதொரு ஆச்சார்யனிடத்து சிஷ்யனாயிருந்து அனுபவிக்க வேண்டுமென்று, பெரிய ஜீயரான மணவாள மாமுனிகளை ஆச்சார்யனாய் அடைந்தானே..?