ஸ்ரீபாஞ்சராத்ரம் – 30
07-05-2010
ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்
எம்பெருமானுக்கு திருவாராதனம் செய்யும் சமயம் ஆரம்பம் முதல் மௌனமாயிருந்து, நம் புத்தியினை அலைப்பாய விடாமல், எம்பெருமானிடத்தில் செலுத்தி சிரத்தையுடன் செய்யவேண்டும்.
திருவாராதன சமயத்தில் எக்காரணம் கொண்டும் பேசுதல் கூடாது.
இச்சமயத்தில் பேசுவது பலமான விரோதத்தினை ஏற்படுத்தும்.
எவ்விதமான ஜாடைகளோ, செய்கைகளோ, மூக்கினால் முனகுவதோ கூடாது. இதனை மீறினால் நமது சித்தியானது தடைப்படும்.
மௌனம் ஸர்வ சித்திகளையும் தரவல்லது.
தியான முத்ரையோடு, அஸ்த்ர மந்திரத்தினால் உள்ளங்கை, புறங்கை, விரல்கள் முதலானவற்றை அலம்பிக்கொள்ள வேண்டும். இந்த கரசுத்தி முடிந்தவுடன் ஸ்தான சுத்தி செய்யவேண்டும்.
சூரியனை ஒத்த ஒளியுடையவனும், ஜ்வாலை போன்று பிரகாசிக்கும் திருமுகமண்டலமுடைய எம்பெருமானை தியானித்து, அவனாலே பிரம்மலோகம் வரையுள்ள உலகங்கள் ஒளிபொருந்தியதாய் தியானிக்கவேண்டும் – அனைத்துத் திக்குகளும் அவனது தேஜஸ்ஸினால்
ஜ்வலிப்பதாக எண்ணவேண்டும்.
மண்ணால் ஆன பாத்திரம் நெருப்பினால் சுடப்பட்டு பயன்பாட்டுக்கு உதவுவது போல, இந்த பூமியான பாத்திரம், எம்பெருமானாகிய நெருப்பினால் சுடப்பட்டு, அம்ருத அலைகளால் அனைத்து இடங்களும் நினைந்து, பவித்ரமானதாய் எண்ணவேண்டும்.
பின்பு திக்பந்தனம் செய்யவேண்டும்.
பிராணயாமம் செய்யவேண்டும்.
பிராணயாமம் எதற்காக செய்யவேண்டும்..? காரணம் சொல்கின்றார் சாண்டில்யர்..!
மன உளைச்சலையும், நிலையற்ற தன்மையையும் உடைய மனதினை ஒருநிலைப்படுத்துவதற்கும், பிராணன் முதலான வாயுக்களை ஜெயிப்பதற்கும், நம்முடைய “தமோ“ குணத்தினைப் போக்குவதற்காகவும்
பிராணயாமத்தினைச் செய்யவேண்டும்.
சரீரத்திலுள்ள நாடிகளின் அமைப்பையும், பிராணன் முதலிய வாயுக்கள் இருக்கும் இடத்தினையும், ப்ராணயாமத்தின் சொரூபத்தினையும் அறிந்து கொண்டு பிராணயாமத்தினைச் செய்யவேண்டும்.
நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!
இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும் (கந்தம் = ஹ்ருதயம்..? ). நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.