பொய்கையாழ்வாரை அயோநிஜர் என்பர். கருவிலேயே பெரியபெருமாள் ஸேவை புரிந்து நான் பிண்டமாயிருக்கும் போதே கைத்தொழுதேன் என்கிறார். அப்படியென்றால் இவரின் முற்பிறவியிலிருந்து இவருக்கு அரங்கனின் சம்பந்தம் உள்ளதாகின்றது.
அடுத்து வருகின்ற பூதத்தாழ்வார் என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீரங்கநாதனே என்று பாடுகின்றார். பொய்கையாருக்கு கருவிலேயே காட்சி தந்தவர் இவரின் நெஞ்சத்தில் நிரந்தரமாக குடிபுகுந்தார்.
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் – எனைப்பலரும்
தேவாதி தேவனெனப்படுவான் – முன்னொருநாள்
மாவாய் பிளந்த மகன்
(எண்ணற்ற வேத விற்பன்னர்களால், தேவர்களுக்கெல்லாம் தேவன், என்று சொல்லப்படுகிறவன் எம்பெருமாள், மிகவும் பெரிய திருப்பாற்கடலில் சயனித்துக் கொண்டிருப்பவனும், முன்பு ஒரு யுகத்தில் (கிருஷ்ணவதாரத்தில்) குதிரை வடிவம் எடுத்துத் தாக்க வந்த கேசி என்னும் அரக்கனின் வாயினைப் பிளந்த கிருஷ்ணனும், மேலும் அந்தத் திருமலையில் நின்று கொண்டிருப்பவனும், திருவரங்கத்தில் சயனித்துக் கொண்டும் இருப்பவனாகிய எம்பெருமாளே! என் நினைவிலும் நெஞ்சத்திலும் என்றும் நீங்காமல் குடி கொண்டுள்ளான்)
இவர் வைகுண்டத்திற்கான ஒரே வழி அரங்கனது வழியில் செல்வதுதான் என்கிறார்.
”திறம்பிற்று இனியறிந்தேன் தென்னரங்கத்தெந்தை
திறம்பாவழி சென்றார்க்கல்லால் – திறம்பாச்
செடிநரகை நீக்கித் தாம் செல்வதன்முன் – வானோர்
கடிநகர வாசற் கதவு
(திருவரங்கத்திலே பள்ளி கொண்டுள்ள பெரியபெருமாள் என்பவனது வழியில் செல்லாமல் இருப்பவர்களுக்கு, இந்த உலகில் சம்சார பந்தத்தினை வேரறுத்து உள்ளே செல்லக்கூடியதும், வானோர்கள் வாசம் செய்வதும், நீண்ட அரண்களையுடையதும், ஆகிய ஸ்ரீவைகுண்டத்தின் வாயிற்கதவுகள் மூடிக்கொள்ளும் என்பதை நான் அறிந்து கொண்டேன். திறம்பாவழி: அரங்கனை மட்டுமே மார்க்கம் என்று எண்ணிப் பிற வழியிலே போகாமல்)
அது என்ன திறம்பாவழி?.
சுமாh; 20 வருடங்களிருக்கும் என்று நினைக்கின்றேன். வேளுக்குடி ஸ்ரீவரதாச்சாரி என்றவொரு மகான். வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் அவர்களின் தந்தை. இந்த ஸ்வாமிக்கு உபன்யாஸம் தவிர கைங்கர்யத்திலும் மிக்க ஈடுபாடு. திருமலையில் மடப்பள்ளியில் கூட கைங்கர்யம் செய்ததாக கேள்விப்பட்டுள்ளேன். பெரியபெருமாளிடத்து மிகுந்த ஈடுபாடு. பெரும்பாலும் பெரியபெருமாள் திருவாராதனம் போது கூடவேயிருந்து ஸேவிப்பார்.. அன்று ஸ்ரீகிருஷ்ணபட்டர் என்னும் மூத்த அர்ச்சகர் திருவாராதனம். அடியேனும் அர்ச்சகருக்கு உதவியாக மூலஸ்தானத்திலிருந்தேன். வேளுக்குடி ஸ்வாமி திருமணி ஸேவித்துக் கொண்டிருந்தார். திருவாராதனம் முடிந்தது. ஸ்வாமிக்கு நம்பெருமாள் அபயஹஸ்தத்தினைக் கொடுத்து மாலை, துளசி எல்லாம் அனுக்கிரஹித்து ஸேவை முடிந்தது. ஸ்வாமி கையில் துளசி பிரசாதங்கள், வலது கையில் அபயஹஸ்தத்துடன் தாயார் ஸந்நிதி நோக்கி போய்கொண்டிருக்கின்றார். போகும் வழியில் பரமபதவாசல் அருகில் மூர்ச்சையாகி கீழே விழுந்தார். சில நிமிடங்களில், நம்பெருமாளின் பக்கம் போய் சேர்ந்தார். ப்ரத்யக்ஷமாக கைகளில் நம்பெருமாள் பிரஸாதங்களுடன் வைகுண்டம் புகுந்தவர் இந்த மஹான்.
இப்போது சொல்லுங்கள் ‘திறம்பாவழி’?.
நான் சுருக்கமாக சொல்லவா?
அரங்கனிடம் மிக்க ஈடுபாடு. இது ஒன்றுபோதும்.
மற்றதெல்லாம் அவன் பாடு!
-Posted on 27th April’2008-